tamilnadu

img

அமித்ஷாவின் ஆணவப்போக்கிற்று சிபிஎம் கடும் கண்டனம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டம் இன்று 
சென்னையில் நடைபெற்றது. மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன்
தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல்
தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன்,
அ.சவுந்தரராசன், பி.சம்பத், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள்
கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை சந்திக்காமல் புறக்கணிக்கும்
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆணவப்போக்கிற்கு மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக்
கொள்கிறது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க
வேண்டுமென்று தமிழக சட்டப்பேரவையில் ஏகமனதாக தீர்மானம்
நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் ஆளுநர் இதுவரை இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு குடியரசு
தலைவரிடம் மனு அளிக்க சென்றது. கொரோனா நடைமுறைகளை காரணம்
காட்டி அவரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்
அவரது செயலரிடம் எம்.பி.க்கள் குழு மனுவினை அளித்துள்ளது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திமுக நாடாளுமன்ற குழு தலைவர்
டி.ஆர்.பாலு தலைமையில் அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு
சந்திக்க அனுமதி கோரியது. இரண்டு முறை நேரம் ஒதுக்கி அழைத்த நிலையில்
எம்.பி.க்கள் குழு காத்திருந்தபோதும் ஒன்றிய உள்துறை அமைச்சர் தொடர்ந்து 
சந்திக்க மறுத்து புறக்கணித்து வருகிறார். மூன்று நாட்கள் தலைநகர் டெல்லியில்
காத்திருந்து அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு தமிழகம் திரும்பியது. மீண்டும்
03.01.2022 அன்று உள்துறை அமைச்சர் நேரம் ஒதுக்கி அழைத்த நிலையில்
04.01.2022 வரை தமிழக எம்.பி.க்கள் குழுவை சந்திக்கவில்லை. ஒன்றிய உள்துறை
அமைச்சரின் இந்த அணுகுமுறை ஒட்டுமொத்த தமிழக மக்களையும்
அவமதிக்கும் செயலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல்
நெறிமுறைகளுக்கு எதிரானது. தமிழகத்திற்கு எதிரான ஒன்றிய பாஜக அரசின்
ஓரவஞ்சனையையே இது வெளிப்படுத்துகிறது.
அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழுவை உடனடியாக சந்திப்பதோடு, நீட்
தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க ஒன்றிய அரசு முன்வர
வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.