tamilnadu

img

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஊழியரை தாக்கிய வெள்ளைப்புலி  

சென்னை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட வெள்ளைப்புலி ஒன்று அதன் பராமரிப்பாளரை தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் எண்ணற்ற விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அங்கு அரிய வகை உயிரினமான "நகுலன்" என்ற வெள்ளைப் புலியும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த வெள்ளைப் புலிக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், மருத்துவ சிகிச்சையளிப்பதற்காக கூண்டில் அடைக்கப்பட்டது.  

இதையடுத்து வெள்ளைப்புலியை மருத்துவ பரிசோதனை செய்யவும் அதன் மாதிரிகளை சேகரிக்கவும் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்தப் பணியில் வெள்ளைப் புலியின் பராமரிப்பாளரான செல்லையா என்பவரும் ஈடுபட்டிருந்தார். அப்போது, கூண்டு சரியாக அடைக்கப்படாததால் திடீரென வெள்ளைப்புலி பாய்ந்து ஊழியர் செல்லையாவை தாக்கியதில் பராமரிப்பாளர் செல்லையாவுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் அவருக்கு பெரிய அளவில் காயம் ஏற்படாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதைதொடர்ந்து வெள்ளைப்புலியின் உடல் நிலையை கண்காணித்து அதற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.