tamilnadu

img

வேளாண் விரோத சட்டங்களை விளக்கி கிராமங்கள் தோறும் பிரச்சாரம்... விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை:
வசாயிகளுக்கு விரோதமான, மக்களின் உணவு உரிமையை பறிக்கும், நிலவளம், நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயமான வகையிலும் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள மோசமான வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வதென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்  முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் அக்டோபர்  1  அன்று மாநில துணைத்தலைவர் டி.ரவீந்திரன் அவர்கள் தலைமையில் இணையவழியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் கே.பாலகிருஷ்ணன், மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உட்பட மாநிலக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு பிரச்சாரம்
மத்திய பாஜக அரசு, விவசாயிகளுக்கு விரோதமாகவும், மக்களின் உணவு உரிமையை பறிக்கும் வகையிலும் மூன்று சட்டங்களை நாடாளுமன்றத்தில் விதிமுறைகளை மீறி நிறைவேற்றி உள்ளது. இந்திய விவசாயத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பெரும் வர்த்தக நிறுவனங்கள் எவ்வித இடையூறுமின்றி தலையிடவும், இந்திய நிலவளம், நீர்வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படவும் இச்சட்டங்கள் வழிவகை செய்கிறது. இத்தகைய மோசமான வேளாண் சட்டங்கள் குறித்து விவசாயிகள் மற்றும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் பிரச்சார இயக்கத்தை மேற்கொள்வதென்று மாநிலக்குழு முடிவு செய்துள்ளது.

நெல்கொள்முதல் செய்திடுக!
நெல்கொள்முதல் செய்வதை கடந்த 25 ஆம் தேதி முதல் தமிழக அரசு நிறுத்திவிட்டது. இதனால் காவிரிடெல்டா மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான நெல் மூட்டைகள் சாலையோரங்களில் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டுள்ளது. இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். கொள்முதல் மையங்களை உடனடியாக செயல்படுத்துவதுடன் ஒவ்வொரு மையத்திலும் நாள்தோறும் குறைந்தபட்சம் ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்வதுடன், ஈரப்பதத்தை காரணம் காட்டி திருப்பி அனுப்பாமல் அனைத்து நெல்லையும் கொள்முதல் செய்ய வேண்டும். அத்துடன், கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் அனைத்தையும் லாரிகள் மூலம் உடனுக்குடன் அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் பால் உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்புவது, பால் கொள்முதலுக்கு வார விடுமுறை விடுவது, பல வாரங்களாக பாலுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பது போன்ற செயல்களால் பால் உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆவின் நிறுவனத்தை சீரழிக்கும் வகையில் அதிமுக அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. 17 பால் மாவட்ட ஒன்றியங்கள் என்று இருந்ததை 25 மாவட்ட ஒன்றியங்களாக மாற்றி தேவையற்ற ஊழியர்களை நியமனம் செய்து வரவை விட செலவு அதிகமாகி ஆவின் நிறுவனத்தையே மூடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்கு மாநிலக்குழு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. 

உடனடியாக ஆவின் நிறுவனத்தை பாதுகாக்கும் வகையில் நிர்வாகச் சீர்திருத்த நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.  உற்பத்தியாளர்கள் கொண்டு வரும் பால் முழுவதையும் கொள்முதல் செய்வதுடன், பால் பாக்கி பணத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.