சென்னை மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யு.ஜி.சி நெட் மறு தேர்வு நாளை (14.12.2023)நடைபெறும் என்று யூ.ஜி.சி அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் காரணமாக கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். அதே சமயம், நாடு முழுவதும் கடந்த டிசம்பர் 6-ஆம் தேதி யூ.ஜி.சி நெட் தேர்வு நடைபெற்றது. இந்த சூழலில், புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாணவர்களுக்கு யூ.ஜி.சி நெட் தேர்வை வேறு தேதியில் மாற்றி வைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் யூ.ஜி.சி தலைவர் ஜகதேஷ் குமாருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். மேலும், இது தொடர்பாக மக்களவையிலும் சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்தார். இதன் எதிரொளியாக, சென்னை மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் மட்டும் யூ.ஜி.சி நெட் மறு தேர்வு நாளை (14.12.2023)நடைபெறும் என்று யூ.ஜி.சி அறிவித்துள்ளது.
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"யூ.ஜி.சி - நெட் மறு தேர்வு கோரிக்கை வெற்றி. சென்னை வெள்ளம் காரணமாக யூ.ஜி.சி - நெட் தேர்வை எழுத இயலாதவர்களுக்கு மறு தேர்வு வேண்டுமென்று ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கோரிக்கைவைத்தேன்.
எனது கோரிக்கையை ஏற்று சென்னை, நெல்லூர் மையங்களில் டிச; 6 அன்று எழுத இயலாமல் போனவர்களுக்கு டிச; 14 மறு தேர்வு என அறிவிப்பு. அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு நன்றி." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.