கேரள மாநிலம் காசர்கோட்டில் 1921 டிசம்பர் 21 அன்று பிறந்தவர் தோழர் ஆர்.உமாநாத். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பயின்றார். அப்போது, பல்கலை.யில் இருந்த பொதுவுடமைக் குழுவில் சேர்ந்தார்.
கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டதன்படி கல்லூரிப் படிப்பைத் துறந்து, முழுநேர ஊழியரானார். 1940 இல் சென்னை சதி வழக்கில் பி.ராமமூர்த்தியுடன் கைது செய்யப்பட்ட இவர், மூன்று ஆண்டுகளைச் சிறையில் கழித்தார். மொத்தம் 9.5 ஆண்டுகள் சிறையிலும், 7 ஆண்டுகள் தலைமறைவாகவும் வாழ்ந்தார். சிறையிலிருந்து தப்பித்த துணிச்சல்காரர் இவர்.
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் சட்ட சலுகைகளையும் உரிமைகளையும் பெறுவதற்கு, பி.ராமமூர்த்தி, கே.ரமணி ஆகியோருடன் இணைந்து வெற்றிகரமான வேலைநிறுத்தங்களை நடத்தினார். டால்மியாபுரம் சிமெண்ட் ஆலைத் தொழிலாளர் போராட்டத்தில், காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டார். முதல்வர் அண்ணா இப்பிரச்சனையில் தலையிட்ட பின்னர் முடிவுக்கு வந்தது.
1970 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய தொழிற்சங்க மைய (சிஐடியு) மாநாட்டில் அகில இந்திய நிர்வாகியாகவும், சிஐடியு முதல் மாநாட்டில் தமிழ் மாநில பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.
சிறந்த பேச்சாளரான உமாநாத், புதுக்கோட்டை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும், பின்னர் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், உழைக்கும் வர்க்க நலனுக்காக ஓயாது உழைத்தார்.