நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம் என தொகுதி மறுசீரமைப்பு தோடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று தொகுதி மறுசீரமைப்பு தோடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் துணை முதலமைச்சர்கள், தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அப்போழுது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம் என தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் பேசியதாவது:
“, இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இந்த நாள் அமையப் போகிறது. தொகுதி மறுசீரமைப்பை பற்றி நான் உங்களுக்கு அதிகமாக விளக்க வேண்டிய அவசியமில்லை. வரவிருக்கின்ற - அல்லது எதிர்காலத்தில் நடைபெறுகின்ற சென்சஸ் அடிப்படையில் மேற்கொள்ளவிருக்கும், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது. மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாகக் கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும். எனவேதான் இதனை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களைத் தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களைச் சொல்வதற்கான வலிமை குறைகிறது.
. உரிமையை நிலைநாட்டிட தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது மிக அவசியமாகிறது. ஒன்றிய அரசை வலியுறுத்துவது ஒருபக்கமும் இன்னொரு பக்கம் இதுகுறித்து மக்களிடம் விளக்கிட- மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திட இந்த கூட்டு நடவடிக்கைக் குழு மிக அவசியம் என்றே கருதுகிறேன்.
நமது அரசியல்ரீதியான எதிர்ப்பைச் சட்டபூர்வமாக எப்படி நடத்துவது என்பது குறித்து அனைவரும் ஆலோசனைகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அரசியல் மற்றும் சட்ட நடவடிக்கைகளை வரையறுப்பதற்காக வல்லுநர்களின் குழுவை அமைக்க நான் முன்மொழிகிறேன். ஒட்டுமொத்த முன்மொழிவு குறித்த தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். எந்தச் சூழலிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது; குறையவிடக் கூடாது என்ற உறுதியோடு போராடுவோம். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம்.” இவ்வாறு அவர் பேசினார்.