tamilnadu

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 21 பேர் மீது நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, பொதுமக்கள் மீது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதேசமயம், தமிழக அரசின் உத்தரவின் பேரில், இந்த வழக்கு தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு கட்ட விசாரணை மேற்கொண்டு, தனது விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த அருணா ஜெகதீசன் ஆணையம், சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது.
இந்த நிலையில், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், 17 காவல்துறை அதிகாரிகள், 3 வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்ட 21 பேருக்கு  எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
அப்போது நீதிபதிகள், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 21 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் இவர்களின் பங்கு என்ன என்பது குறித்து தனித்தனியாக விளக்க அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 11-க்கு ஒத்திவைத்தனர். 

;