tamilnadu

மாணவி மீது ஆசிட் ஊற்றுவதாக மிரட்டிய வாலிபர் கைது

சென்னை, ஏப். 17- சென்னை கே.கே.நகர் 9ஆவது செக்டார் பகுதியில் வசிப்பவர் சீ.வீரபாண்டி (23). இவர் அந்த பகுதியில் மோட்டர் பைக் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். வீரபாண்டியும், அதேப் பகுதியைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக அண்மையில் இருவரும் பிரிந்தனர். அதன் பின்னர் அந்த மாணவியின் குடும்பத்தினர், ராயலா நகருக்கு குடி பெயர்ந்துள்ளனர். அதேவேளையில் வீரபாண்டி, அந்த கல்லூரி மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.இந்நிலையில் புதன்கிழமை அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்ற வீரபாண்டி, தன்னை காதலிக்குமாறு கூறியுள்ளார். உடனே மாணவி, அவரை கண்டித்துள்ளார். அப்போது அவர் அந்த மாணவியிடம் காதலிக்கவில்லை என்றால் உன்மீது ஆசிட் வீசுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார்.இதுகுறித்து அந்த மாணவி ராயலா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, வீரபாண்டியை கைது செய்துள்ளனர். 

;