திருவள்ளூர், ஜூன் 11 - திருமணம் நடைபெற்ற அன்றிரவே மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு, கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோமன்ச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் நீதிவாசனுக்கும்(26), சடையின்குப்பத்தை சேர்ந்த சந்தியாவுக்கும் (24) புதனன்று (ஜூன் 10) காலை திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் முதலிரவு அன்று புதுமணத் தம்பதிகளுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நீதிவாசன், கடப்பாரையால் மனைவி சந்தியாவை அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டூர் காவல்துறையினர் சந்தியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இதன்பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவான நீதிவாசனை தேடினர். இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள ஏரிக்கரை மரம் ஒன்றில் நீதிவாசன் கட்டியிருந்த வேட்டியில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவம் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.