tamilnadu

img

கூட்டணி தர்மம் எனக் கூறி வாக்காளர்களுக்கு அதிமுக துரோகம்!

சென்னை, ஏப். 13- கூட்டணி தர்மம் எனக் கூறி வாக்காளர்களுக்கு துரோகம் செய்த அதிமுக, பாமகவை புறக்கணிக்க வேண்டும் என பெரம்பூர் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட் பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளியன்று (ஏப்.12) பெரம்பூர் முத்தமிழ் நகரில் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கோடீஸ்வரி தலைமையில் பொதுக்கூட்டம் நடை பெற்றது.

இதில் கலந்து கொண்டு ஜி.ராம கிருஷ்ணன் பேசுகையில், அழகிய காஷ்மீர் மாநிலத்தை உடைத்து  இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியதை சிபிஎம், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதற்கும் அதிமுக, பாமக ஆதரவு அளித்தது. தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் சில மாநிலங்களில் சட்டமன்றத் தேர்த லும் நடைபெறுகிறது. ஆனால் காஷ்மீர்  மாநிலத்தில் மட்டும் ஏன் தேர்தல் நடத்த  முன்வரவில்லை.

தேர்தல் நடைபெறும்  என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லை. தற்போது பிற மாநிலங்களை யும் யூனியன் பிரதேசங்களாக அறிவித் தால் அதை தடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார். 38 முதலாளிகள் 179 ஒப்பந்தங்களை  பெறுவதற்காக, தேர்தல் பத்திரம் மூலம்  பாஜகவிற்கு வழங்கி ரூ.3 லட்சத்து  80 ஆயிரம் கோடி  ஒப்பந்தத்தை பெற் றுள்ளனர். வருமான வரி சட்டத்தில் திருத்தம், தொழிற்சாலைகள் சட்டத் தில் திருத்தம், தேர்தல் சட்டத்தில் திருத்தம், வெளிநாட்டில் இருந்து வரும் நிதி பராமரிக்கும் சட்டத்தில் திருத்தம்  மேற்கொண்டார்கள். இறுதியில் ஆர்பிஐ சட்டத்தையும் திருத்தினார் கள்.

எதற்காக என்றால் ஊழல் செய்வ  தற்காகத்தான். இப்படி ஊழலில்  ஊறித்திளைக்கும் பாஜக ஊழலை ஒழிக்கப்போகிறோம் எனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு திமுக தான் தடையாக உள்ளது என மோடி நாகூசாமல் பேசுகிறார். கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சியில் ஒரு  முன்னணி மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல இந்திய நாட்டின் வளர்ச்சிக்கே தடையாக  இருப்பது மோடிதான் என்றார். ஜன நாயகத்தை, அரசியலமைப்புச் சட்டத்தை, மதச்சார்பின்மையை, கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாக்க வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி  ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு இந்த பகுதி மக்கள் கலாநிதி வீரா சாமியை மகத்தான வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம், மாவட்டக்குழு உறுப்பினர் ஜி.நித்தியராஜ், பகுதிக் குழு உறுப்பினர் சி.அரி, திமுக பகுதிச்  செயலாளர் அ.முருகன், சிபிஐ பகுதிச் செயலாளர் கோட்டி சுரேஷ், விசிக பகுதிச் செயலாளர் கல்தூண் ரவி, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் நாகூர் மீரான் ஆகி யோரும் பேசினர். முன்னதாக எஸ்.கார்த்திக் வரவேற்றார். ஜெ.டேவிட் நன்றி கூறினார். இதில் சிபிஎம் பகுதிச்செயலாளர் அ.விஜயகுமார், மாவட்டக்குழு உறுப் பினர் எம்.ராஜ்குமார், நிர்வாகிகள் எஸ்.ஏ.வெற்றிராஜன், ஜே.பிரமிளா, கே.ஜாகிர் உசேன், அ.முரளிதரன், ஆர்.மோகன், டி.சரவணன், திமுக வட்டச் செயலாளர் மு.உமாபதி உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மோடியின் ஊழல் ஒழிப்பு லட்சணம்!

“ஊழலை வேரறுக்க பாடுபடும் நான் ஒருபுறம், ஊழலை பாதுகாக்க போராடுபவர்கள் மறுபுறம் என ராஜஸ்தானில் மோடி பேசியுள்ளார். ஆனால் தேர்தல் பத்திரம் மூலம் சட்டபூர்வமாக ஊழல் செய்துள்ளது பாஜகதான். போலி நிறுவனங்கள் பெயரில் பல கோடி ரூபாய் தேர்தல் நிதி பெற்றுள்ளது. அதை மறைக்க இப்படி இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் மீது பழி சுமத்தி பிரச்சாரம் செய்கிறார். 35 மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்த மருந்து தரமற்றவை எனக் கூறி அந்த நிறுவனங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால் அத்தனை நிறுவனங்களும் சேர்ந்து ரூ.394 கோடி பாஜகவுக்கு நிதி கொடுத்தார்கள். அந்த நிறுவனங்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்ப பெறப்பட்டன. தரமற்ற மருந்தை பயன்படுத்தி எளிய மக்கள் செத்தாலும் பரவாயில்லை, தங்களுக்கு நிதி வந்தால் போதும் என நினைக்கிறார்கள்.”