tamilnadu

விவசாயிகள் பெயரில் தனியார் சர்க்கரை ஆலை மோசடி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 5-தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் மாநில துணைத் தலைவர் ஏ.எம்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின்ய மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநில பொருளாளர் எம்.சின்னப்பா உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.ஸ்ரீஅம்பிகா, திரு. ஆரூரான் ஆகிய சர்க்கரை ஆலைகள் ஆயிரக் கணக்கான விவசாயிகள் பெயரில் வங்கிகளில் கடன் பெற்று தனது சொந்தத் தேவைக்கு பயன்படுத்திக் கொண்டன. தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், மாவட்டங்களில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.600 கோடிக்கு மேல் விவசாயிகள் பெயரில் மோசடியாக கடன் பெற்றுள்ளனர். கரும்பு பதிவு செய்ய வேண்டும், வங்கியில் புதிதாக கணக்கு துவங்க வேண்டும் என்று சொல்லி விவசாயிகளிடம் கரும்பு அலுவலகத்தில் வைத்தே கையெழுத்துக்களை பெற்று அவற்றை வங்கிகளில் கொடுத்து கடன் பெற்றுள்ளனர். நிலமில்லாத கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் பெயரிலும் ஆரூரான் சர்க்கரை ஆலை கடன் வாங்கி உள்ளது. வங்கிகள் விவசாயிகளுக்கு கடனை கட்டச் சொல்லி வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்புகின்றனர்.கும்பகோணத்தில் உள்ள கார்ப்பரேசன் வங்கி 212 விவசாயிகளுக்கு கரும்பு வெட்டுக் கூலி தருவதற்காக ரூ.45 கோடி கடன் கொடுத்ததா கவும் அசலும் வட்டியும் சேர்த்து ரூ.46 கோடியே 89 லட்சம் வங்கிகளுக்கு கட்டுமாறும் விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில் ஒரு ரூபாயைக் கூட விவசாயிகள் வாங்கவில்லை. விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் பெரும் தொகையை அம்பிகா, ஆரூரான் ஆகிய சர்க்கரை ஆலைகள் எடுத்துக் கொண்டது பெரும் மோசடியாகும். தமிழ்நாட்டில் வேறு சில தனியார் சர்க்கரை ஆலைகளும் இத்தகு மோசடியை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இது குறித்து முழுமையாக விசாரிக்க மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கு (சிபிஐ) மாநில அரசு உத்தரவிட வேண்டும் என இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கரும்பு பண பாக்கி
ஸ்ரீ அம்பிகா, திரு ஆரூரான் சர்க்கரை ஆலைகள் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கரும்புக்கு மத்திய அரசின் பரிந்துரை விலை (எப்.ஆர்.பி.) ரூ.82 கோடி பாக்கி வைத்துள்ளனர். சட்டப்படி 14 நாட்களில் கொடுத்திருக்க வேண்டிய எப்.ஆர்.பி. பாக்கியை ஓராண்டுக்கு மேல் தரவில்லை. இது போல மற்ற ஆலைகளும் தர வேண்டிய எப்.ஆர்.பி. கரும்பு பண பாக்கி ரூ.300 கோடிக்கு மேல் உள்ளதை விவசாயிகளுக்கு உடனடியாக பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது.இதே போல, 2013-14 முதல் 2016-17 வரையிலான நான்கு ஆண்டு காலத்திற்கு மாநில அரசு அறிவித்த கரும்புக்கான பரிந்துரை விலையை எஸ்.ஏ.பி.,24 தனியார் சர்க்கரை ஆலைகள் தரவில்லை. ரூ.1217 கோடி பாக்கி வைத்துள்ளனர். கூட்டுறவு ஆலைகளில் ரூ.207 கோடி பாக்கி உள்ளது.தமிழக முதல்வர் மாநில அரசு அறிவித்த விலையை தனியார் சர்க்கரை ஆலைகளிடம் பெற்றுத்தருவோம் என சட்ட மன்றத்தில் அறிவித்தார். ஆனால் மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் பாக்கித் தொகை விவசாயிகளுக்கு ஆலைகள் தரவில்லை. தமிழக அரசு எஸ்.ஏ.பி., பாக்கி ரூ.1414 கோடியை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.2018-19 ஆம் ஆண்டு பருவ கரும்புக்கு மத்திய அரசு அறிவித்த விலைபோக ஒரு டன் னுக்கு ரூ.137.50 கூடுதல் விலையாக தருவதாக மாநில அரசு ஒப்புக் கொண்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்து மாநில அரசு உத்தரவையும் பிறப் பித்துள்ளது. இத்தொகையை டன்னுக்கு ரூ.200 ஆக உயர்த்தி தீபாவளி பண்டிகைக்கு முன்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளது.