தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “ தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 17 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தலைமைச்செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறியுடன் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1.5 கோடி முககவசங்கள் வாங்குவதற்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. 25 லட்சம் என்.95 முககவசங்கள் வாங்கவும் ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.