tamilnadu

img

தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்...

புதிய தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

மத்திய அரசு அறிவித்துள்ள தேசிய கல்விக் கொள்கை மாநில உரிமைகளை பறிப்பது, அதிகாரத்தை மையப்படுத்தவது, வணிகமயமாக்கலுக்கு கல்வியை முற்றிலும் திறந்துவிடுவது, காவிமயமாக்குவது, ஏழைகளுக்கு கல்வியை மறுப்பது, ஒடுக்கப்பட்ட மக்களின் இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது, வழக்கொழிந்த சமஸ்கிருத மொழியை இதர மொழி பேசும் மக்கள் மீது திணிப்பது, அனைவருக்கும் கல்வி என்பதற்கு பதிலாக முதல் தலைமுறை மாணவர்களை ஒதுக்கி வைக்கவும் வடிகட்டுவதற்கும் வழிகோலுவது என்று பல்வேறு பிற்போக்கான நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், கல்வித்துறை செயல்பாட்டாளர்கள் என்று அனைத்து தரப்பினராலும் இது நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
கல்வியில் ஏற்படும் எந்த மாற்றமும் சமூக, பொருளாதார, கலாச்சார நடவடிக்கைகளில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்தக் காரணங்களாலேயே இந்த தேசிய கல்விக் கொள்கை முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என பலரும் கோரி வருகின்றனர்.
இதன் காரணமாகவே தமிழகத்தில் பாஜக தவிர்த்து அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கல்வித் திட்டத்தை நிராகரிக்க கோருகின்றன.  திராவிட முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசு இத்திட்டத்தை முற்றிலும் நிராகரிக்க வேண்டும் எனவும் இந்த திட்டத்தை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் முதலமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளன.
இந்த நிலையில், இன்று தமிழக அரசு மும்மொழி திட்டத்தை கைவிட வேண்டுமெனவும், தமிழக அரசு அதை ஏற்றுக் கொள்ளாது எனவும் கருத்து சொல்லியிருப்பது வரவேற்கத்தகுந்ததே. மும்மொழிக் கொள்கை என்பது இந்த திட்டத்திலுள்ள கைவிட வேண்டிய முக்கியமான அம்சங்களில் ஒன்று. அதேசமயம் மாநில உரிமை, சமூக நீதி, பாலின சமத்துவம், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கல்வி உத்தரவாதம் உள்ளிட்ட பல அம்சங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இவற்றைக் கணக்கில் கொண்டு தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டுமெனவும்  இந்தக் கொள்கையை கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும்  மாநில அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.
மும்மொழிக் கொள்கையை கைவிட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையோடு தமிழக அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்துவிடக் கூடாது என்பதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். எனவே, இந்தக் கொள்கையை முற்றிலுமாக கைவிட மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமெனவும் மாநில அரசு இத்திட்டத்தை அமல்படுத்தாது என தமிழக அரசு, மத்திய அரசிடம் உறுதிபட தெரிவிக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.