சாம்சங் தொழிலாளர்கள் உடனான பேச்சு வார்த்தை குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிர்வாகத்திற்குப் புரியும் மொழி போராட்டம் தான் என மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, சாம்சங் தொழிலாளர்களின் மற்ற கோரிக்கைகளை நிர்வனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சங்கத்தை பதிவு செய்வது தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் எதுவும் செய்ய முடியாது என்று நிறுவனம் கூறுகிறதாகவும், இந்த ஒரே ஒரு கோரிக்கைக்காக தொழிலாளர்கள் இன்றும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகிறதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நிர்வாகத்திற்குப் புரியும் மொழி போராட்டம் தான் என மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.
இது குறித்து உ.வாசுகி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:
"சாம்சங் பேச்சு வார்த்தை குறித்து அமைச்சர் ஊடக சந்திப்பில் பேசியதைக் கேட்டேன். சாதுர்யமாக இருந்தது. நிர்வாகம், ஒரே ஒரு கோரிக்கையைத் தவிர அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக் கொண்டது, அந்த ஒன்று தொழிற்சங்கப் பதிவு பற்றி...அது கோர்ட்டில் இருக்கிறது, subjudice என்கிறார். விந்தை தான்..
மற்ற கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்பதும் கருணையினால் அல்ல, சிஐடியு தலைமையில் தொழிலாளிகளின் வீரம் செறிந்த போராட்டத்தினால் தான் என்பதைப் புரிந்து கொள்வது கடினமல்ல.. நிர்வாகத்திற்குப் புரியும் மொழி போராட்டம் தான்.. அந்த மொழியில் பேசியதால்தான் நிர்வாகத்துக்கு நிர்ப்பந்தம் ஏற்பட்டது...
தொழிற்சங்கப் பதிவு ஏன் கோர்ட்டுக்கு போனது? தொழிலாளர் நலத்துறை வேண்டுமென்றே பதிவு செய்ய மறுத்து இழுத்தடிப்பது தானே காரணம்? சாம்சங் என்ற பெயரைப் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகத் தரப்பில் சொன்ன சொத்தை காரணத்தை தொழிலாளர் நலத்துறை தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியம் என்ன?
தொழிலாளர் நலத்துறை சங்கத்தைச் பதிவு செய்ய மறுக்கிறது.. பதிவு செய்யாத சங்கத்திடம் எப்படி பேச முடியும் என நிர்வாகம் கூறுகிறது.. இது ஜாடிக்கேற்ற மூடி தவிர வேறு என்ன? சிஐடியு வந்துவிடக் கூடாது என நிர்வாகம் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. தொழிலாளர் நலத்துறைக்கும் அப்படித்தானோ!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.