சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர் பகுதியில் காணாமல் போன சிறுவன் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஊரப்பாக்கம் அடுத்த ஆதனூர் பகுதியில் நேற்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த டானியல் ஜான் என்ற 3 வயது சிறுவன் திடீரென காணவில்லை . சிறுவனின் பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடி, எங்கேயும் சிறுவன் கிடைக்கததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுவனைத் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்நிலையில் இன்று அப்பகுதியில் உள்ள கால்வாய்க்கால் ஒன்றில் சிறுவனின் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து , சிறுவனின் உடலை மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் விளையாடும்போது கால்வாயில் விழுந்து உயிரிழந்தானா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் புதுச்சேரியில் சிறுமி கொலைசெய்யப்பட்டு வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னையில் காணாமல் போன சிறுவன் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.