சென்னை:
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு பரவல் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் பாஜக அறிவித்திருக்கும் “வேல் யாத்திரைக்கு” அனுமதி கொடுக்கவில்லை என்று தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில், நவம்பர் 6 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் துவங்கி டிசம்பர் 6 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நிறைவடையும் வகையில் ஒரு மாத காலத்திற்கு “வேல் யாத்திரை” என்ற பெயரில் கலவர யாத்திரைநடத்துவதற்கு தமிழக பாஜக திட்டமிட்டுள்ளது.பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதிதரக்கூடாது என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர்.பாஜக நடத்தவிருக்கும் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த செந்தில்குமார்என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
அந்த மனுவில், வைரஸ் பெரும் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க முன்களத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், காவலர்கள், சுகாதாரத் துறையினர் பணி அளப்பரியது. இந்தப் போராட்டத்தில் மருத்துவர்கள் உள்ளிட்ட பலரும் வீரமரணம் அடைந்துள்ளனர்.இந்த சூழ்நிலையில் எந்த ஒரு அரசியல் கட்சியும், அமைப்பும் மக்கள் மீது அக்கறை கொண்டு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பதுதான் நீதி. மாறாக தமிழகபாஜக வேல் யாத்திரை நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இந்த யாத்திரையை மக்கள் நல்வாழ்வுக்கும் ஆரோக்கியத் திற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
கடந்த மாதம் 30 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 20 ஆயிரமாகும். மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,500 ஆகும்.தமிழ்நாடு முழுவதும் காணொலி காட்சி மூலமே அனைத்து வழக்குகளும் நடந்து வருகிறது. பள்ளி ,கல்லூரிகளும் திறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பூசாரி வைரஸ் தொற்றால் பலியாகி உள்ளார். பிரசித்தி பெற்ற சிதம்பரம் தேர் திருவிழாவும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட அறுபடை வீடுகளில்பங்குனி உத்திர விழாவும் ரத்து செய்யப்பட்டது. தில்லி, கேரளா மாநிலங்களில் இரண்டாவது அலை வீச துவங்கி விட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.ஐரோப்பிய நாடுகளில் இரண்டாம் கட்ட அலை வீச துவங்கி இருக்கிறது. அந்தந்த அரசுகளும் மீண்டும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியிருக்கின்றன.இந்து மதத்தைச் சார்ந்த நான் மக்கள் நலன் கருதியே இந்த பொதுநல வழக்கை தொடர்ந்து இருக்கிறேன். எனவே இந்த யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இதேபோல் பால முருகன் என்பவரும் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, செந்தில்குமார், ராமமூர்த்தி உள்ளடங்கிய முதல் அமர்வு முன்பு வியாழனன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ஸ்டாலின் அபிமன்யு, உதயகுமார், செல்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அப்போது, ஏற்கனவே மனுவில் குறிப்பிட்டிருந்ததை விளக்கமாக எடுத்துரைத்தனர். மேலும், மனுஸ்மிருதி விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவனுக்கு எதிராக பாஜகவினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து வருவதை சுட்டிக் காட்டினர்.‘தேர்தலை மனதில் கொண்டு சிறுபான்மை மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிவழியாக வேல் யாத்திரை செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும், பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமான டிசம்பர் ஆறாம் தேதி இந்த யாத்திரையை நிறைவு செய்து தமிழகத்தில் ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டிருப்பதால் வேல் யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டனர்.
அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயன் , பெருந்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை சுட்டிக் காட்டியதோடு, கொரோனாவுக்கான 2, 3 ஆம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் வேல் யாத்திரைக்குஅனுமதி தர முடியாது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவித்தார்.பாஜக தரப்பில் ஆஜரான ராகவாச்சாரி, பால் கனகராஜ் ஆகியோர் அரசு மற்றும் எதிர்தரப்பு வாதங்களுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள்,” வேல் யாத்திரையை தடை செய்யக் கோரிய மனுதாரரின் மனு, அனுமதி கோரிய பாஜகவினரின் கடிதம் மற்றும் இந்த கொரோனா காலத்தில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும் மக்கள் ஒன்றாக கூடுவதற்கும் அரசு விதித்துள்ள தடை குறித்த அரசாணையை பரிசீலித்து உரிய உத்தரவை வழங்குமாறு” தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
பாஜகவுக்கு எச்சரிக்கை
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டி.ஜெயக்குமார், “பாஜகவின் வேல் யாத்திரை போன்ற ஊர்வலங்களால் கொரோனா அதிகமாக பரவும். கொரோனா இரண்டாம் மற்றும் மூன்றாம் அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை” என்றார். பொதுமக்களின் நலனைகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதால்வேல் யாத்திரையை பாஜக கைவிடுவது நல்லது; சட்டத்தை மீறினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறினார். பாஜக நடத்தவிருந்த வேல் யாத்திரைக்கு அரசு அனுமதி மறுத்ததை திராவிட கழக தலைவர் வீரமணி உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர்.
**********************
வகுப்புவாத அரசியலை உறுதியோடு தடுக்க வேண்டும்: சிபிஎம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத அடையாளங்களை அரசியலுக்கு பயன்படுத்தி கலவரங்களை வளர்ப்பதும், அதன் மூலம் கட்சியின் நடவடிக்கைகளை திட்டமிடுவதும் தான் பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. பல்வேறு மாநிலங்களில் இத்தகைய முயற்சிகளை அக்கட்சி எடுத்து வருவதை கண்கூடாக பார்க்கவும் முடிகிறது.இந்நிலையில் அதே நோக்கத் தோடுதான் அத்தகையதொரு அரசியலை மேற்கொள்ளவும், அதற்கான வாய்ப்பாகவும் தமிழகம்தழுவிய அளவில் வேல் யாத்திரையை மேற்கொள்ள பாஜக திட்டமிட்டிருந்தது. அத்தகையதொரு அறிவிப்பு வந்தவுடனேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான ஆட்சேபணையைத் தெரிவித்ததோடு, கலவரத்திற்கு வித்திடும் அந்த வேல்யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தது.
அனுமதி மறுத்த அரசின் முடிவுக்கு சிபிஎம் வரவேற்பு
தற்போது பாஜக நடத்த திட்டமிட்டிருந்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் வரவேற்பு தெரிவிப்பதோடு, அனுமதி கேட்டு பாஜக நீதிமன்றத்திற்கு சென்று மேல் முறையீடு செய்தாலும், அங்கும் உறுதியாக வாதாடி அனுமதி மறுக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டுமெனவும், வகுப்புவாத அரசியலை எந்தவொரு வடிவத்திலும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது எனும் நிலைப் பாட்டில் அரசு உறுதியாக இருக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.