tamilnadu

img

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து தமிழ்நாடு அரசு வழக்கு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் மணல் குவாரி அதிபர்களுக்கு தொடர்புடைய 34 இடங்களில் ஒரே நேரத்தில் செப்டம்பர் 12-ஆம் தேதி சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து, சட்டவிரோத மணல் விற்பனை தொடர்பாக 10 மாவட்ட ஆட்சியர்கள், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா, ஓய்வு பெற்ற பொதுப் பணித்துறை பொறியாளர் திலகம் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்த சம்மனை தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் சில முக்கிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகியிருந்தார்.
இந்த நிலையில், மணல் குவாரி மோசடி வழக்கில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப அதிகார வரம்பு இல்லை; மாநில அரசு அதிகாரிகளை துன்புறுத்தும் நோக்கிலும், அரசு நிர்வாகத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கிலும் அமலாக்கத் துறை செயல்படுகிறது என்று குறிப்பிட்டு  தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.