ஒசூர் அருகே உள்ள எழுவப்பள்ளி கிராமத்தில் பண்ணைக் குட்டையில் மூழ்கி உயிரிழந்த மாணவன் மற்றும் தலைமையாசிரியர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவர் நித்தின் (வயது 8) இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவரைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில், உயிரிழந்த பள்ளி மாணவர் நித்தின் மற்றும் தலைமையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.