tamilnadu

மன அழுத்தம் அதிகரித்தால் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும்

சென்னை, மே 19- உலக உயர் ரத்த அழுத்த நாளாக மே 17 ஆம்தேதி கடைபிடிக்கப்பட்டது. இதனையொட்டி தமிழக தீயணைப்பு மீட்புத்துறை அலுவலர்களுக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சியை போர்டிஸ் மலர் மருத்துவமனை நடத்தியது.உலக உயர் ரத்தநாளையொட்டி நடத்தப்பட்டஇந்த பயிற்சியில் தீயணைப்புத் துறை அலுவலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அவர்களுக்கு மன இறுக்கமான சூழ்நிலையில் உற்சாகமாக செயல்படுவது குறித்த பயிற்சிகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை கிண்டி தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத்துறை நிலைய அதிகாரி செல்வம் மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனை உளவியல் ஆலோசகர் சினேகா ஜார்ஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியின்போது தீயணைப்பு மீட்புத்துறை வளாகத்தில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. இதில் தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கு மருத்துவ மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை ஆகியவை செய்யப்பட்டன.இந்த நிகழ்ச்சியில் சினேகா பேசுகையில், கோபம், பதட்டம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற உணர்ச்சிகளுக்கு இடையிலான உறவுகள் பற்றி எண்ணற்ற ஆய்வுகள் நடத்தப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.ஆரோக்கியமற்ற சூழ்நிலையில் மன அழுத்தம் ஏற்படுவதால் அது உயர் ரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புமற்றும் பக்கவாதம் ஆகியவை ஏற்பட வழி வகுக்கிறது. நீங்கள் உணர்ச்சி வசப்படும் சமயங்களில் உங்கள் ரத்தக் குழாய் பாதிப்பு அடையும். இதன் காரணமாக இதய நோய்கள் ஏற்படும். ஆரோக்கியமற்றவற்றை புரிந்து கொண்டு விழிப்புடன் இருப்பது என்பது உயர் ரத்த அழுத்தம் இல்லாமல் வாழ்வதற்கான முதல் நிலையாகும் என்றார்.மேலும் அவர், ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்கள் குறித்தும் ரத்த அழுத்தம் உடல் நலத்தை பாதிக்காமல் இருப்பதற்காக அதன் அறிகுறிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் அதை நிர்வகித்தல் ஆகியவை குறித்தும் பேசினார். மேலும் இந்த நிலையில் மருத்துவ ஆலோசனை பெறுவது மற்றும் உதவி பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் வலியுறுத்தினார். இதில் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.