மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட நிதியை கட்டுமானப் பணிக்கு ஒதுக்குவதை கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வறுமை ஒழிப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு கடந்த 15-ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ஊரக வேலைத்திட்டத்திற்கு, ஆண்டிற்கு குடும்பத்திற்கு 100 நபர்கள் வேலை வழங்கிட வேண்டுமென்ற சட்டவிதியை கடந்த 10 ஆண்டுகளாக ஒன்றிய பாஜக அரசும் - தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் படிப்படியாகச் சிதைத்தது. கடந்த ஆண்டு ஒன்றிய அரசு ரூ. 98,000 கோடி ஒதுக்கியது. ஆனால் நடப்பு ஆண்டிற்கு ரூ.73,000 கோடியாக குறைத்ததோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு வைத்துள்ள சம்பள பாக்கி ரூ.12,000 கோடியையும் இதிலிருந்து எடுத்து வழங்கிட வேண்டுமென அறிவித்துள்ளது. இதுபோன்று ஒன்றிய பாஜக அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கீட்டை குறைப்பதால் ஆண்டுக்கு 30 நாள், 40 நாள் மட்டுமே இத்திட்டத்தில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்டமன்றத்தில் அவை விதி 110ன் கீழ் அறிவிப்பு என்ற பெயரிலும், பயனாளிகளுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய நிதியை கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கி ஆளுங்கட்சி ஒப்பந்ததாரர்கள் கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்டது. ரூ.4000 கோடி முறைகேடு நடைபெற்றதை அரசின் சமூகத்தணிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் இந்த முறைகேடுகள் சீர்செய்யப்பட்டு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அறிவித்தார். கிராமப்புற ஏழை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வேலையும் - கூலியும், கூடுதலாக 50 நாள் வேலையும் கிடைக்கும் என இருந்தனர். ஆனால் கடந்த காலத்தில் திட்ட அமலாக்கத்தில் இருந்த குறைபாடுகள் தொடர்வதுடன் வேலையும், தினக்கூலியும் முழுமையாக கிடைக்கவில்லை. அத்தோடு கடந்தகால அரசைப் போலவே அவை விதி 110-ன்படி, 3-அரசாணைகள் மூலமாக, திட்டத்தின் பயனாளிகளுக்கு கூலியாக கிடைக்க வேண்டிய நிதி ரூ. 4000 கோடியை ஊரக வேலைத்திட்டத்தில் பொருள்கள் செலவினம் (Material Cost) என்ற பெயரில், வேறு துறைகளின் கட்டுமானப் பணிகளுக்கு மடைமாற்றம் செய்யும் நிலை தொடர்கிறது. தற்போது கூட தமிழக அரசு ஊரக வளர்ச்சித்துறை அரசாணை எண்.62 மூலமாக, ஊரக வேலைத்திட்ட நிதி ரூ.3006 கோடியை கப்பி சாலை அமைப்பது உள்ளிட்டப் பணிகளுக்கு எடுத்து பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆகவே, தமிழக முதலமைச்சர், ஊரக வேலைத்திட்ட அமலாக்கத்தில் உடன் தலையிட்டு, முழுமையாக வேலை, கூலி கிடைக்கவும், தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்ட கூடுதல் வேலை நாள் 50-ஐயும் சேர்த்து 150 நாள் வேலை வழங்கிடவும், கட்டுமானப் பணிகளுக்கு ஊரக வேலைத் திட்ட நிதியைப் பயன்படுத்துவதை கைவிடவும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென சிபிஐ (எம்) மாநிலக்குழு தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.