tamilnadu

img

ஓராண்டாக சம்பளம் நிலுவை : எப்படி வாழ்வது?  பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்கள் கேள்வி


சென்னை, ஏப். 11 -
பிஎஸ்என்எல் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஓராண்டுக் காலமாக வழங்காமல் உள்ள சம்பள நிலுவை வழங்க வேண்டும் என்று  தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது

இது தொடர்பாக சங்கத்தின்  மாநிலச் செயலாளர்  சி.வினோத் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழக பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். பிஎஸ்என்எல் அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர்களின் மூலமாக பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த ஒரு வருடமாகச் சம்பளத்தை பிஎஸ்என்எல் நிர்வாகம் வழங்காமல் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் 30 விழுக்காடு சம்பளத்தை வழங்க உத்தரவிட்டும் நிர்வாகம் முழுமையாக அமல்படுத்தவில்லை. இதனால் ஒப்பந்த ஊழியர் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றன. இதுவரை நாடு முழுவதும் 10 ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும் அதிகாரிகளும் விருப்ப ஓய்வில் சென்றுவிட்டனர். இந்த பின்புலத்தில் கூடுதலான பணிச்சுமைகளோடும் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் தங்கு தடையற்ற சேவையை வழங்க ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து  பணியாற்றி வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வியலை மேலும் மோசமாக்கியுள்ளது. இதனையும் மீறி கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் தேச நலனுக்காக பணியாற்றி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலைக் கணக்கில் கொண்டு ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும்,
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது