சென்னை, மே 22 - குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணியாற்றும் கொரோனா தொற்று பாதித்த தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க வலியுறுத்தி வெள்ளியன்று (மே 22) வாரிய தலைமையகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணியற்றும் களப்பணியாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள், ஷில்ட் ஆட்டோ மற்றும் ஜெட்ராடிக் ஓட்டுநர்கள் உள்ளிட்டோரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்தபட்ச ஊதியம் 21 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், தொழிலாளர் நலச்சட்டங்களை அமலாக்க வேண்டும், கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களை காக்க பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்ளுக்கு சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளர் எம்.பழனி, பொருளாளர் டி.ஞானபிரகாசம், நிர்வாகிகள் வாசு, ஜானகிராமன், சிஐடியு தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.