சென்னை:
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கு அனுமதியளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவது ஏன் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு என்பது ஒரு 'நவீன மனுதர்மம்' என்பது நாளும் மக்களுக்கு நன்கு புரிந்து வருகிறது.
கதவடைப்பு
வறட்டுப் பிடிவாதம், அதுவும் தமிழ்நாடு போன்ற மருத்துவக் கல்வியில் வளர்ந்தோங்கி வரும் மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட, கிராம, ஏழை, எளிய மாணவர்களுக்கு வாய்ப்புக் கதவை அறவே மூடுவதற்கே இப்படி ஒரு திட்டமிட்ட தடுப்பு ஏற்பாடு!நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள், பயிற்சி மையங்களுக்கு போகாதவர்கள் முதல் ஆண்டிலேயே வெற்றி பெறக் கூடிய வாய்ப்பும் பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை வெகு வெகுச் சொற்பமே என்பது சுவர் எழுத்து போன்று பளிச்சிடுகிறது!நீட் தேர்வு எழுதிடும் மாணவர்களில் தமிழ்நாட்டு மாணவர்கள் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் போதிய வாய்ப்புக் கிட்டவில்லை என்பதால், தமிழக அரசு ஓய்வுபெற்ற ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு குழு அமைத்தது. அக்குழு, 10 சதவிகித இட ஒதுக்கீடு தர பரிந்துரை தந்தது.ஆனால், தமிழக அமைச்சரவை 7.5 சதவீதத்திற்கான தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வந்து கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. இப்போது 45 நாட்களுக்கு மேலாக அது ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.
நீதிபதியின் கண்ணீர்!
இதற்கிடையில் நீட் தேர்வு எழுதியுள்ள அரசுப் பள்ளி மாணவர் சார்பிலும், மருத்துவர் சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை முன்பு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அமர்வுமுன் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் நியாயமான கேள்விகளை எழுப்பி, நீதி பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தோடு, விசாரணை செய்து தமிழக அரசு வழக்கறிஞரிடம், 'ஆளுநரிடம் ஒரு மாதத்திற்கும் மேல் கோப்பு ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. மாணவர்கள் சேர்க்கைக்கு இவ்வாண்டு பயன்பெறச் செய்யவேண்டாமா?' என்று உருக்கத்துடன் கேட்டுக்கொண்டு, ஒரு சதவீதத்திற்கும் கீழேதான் அரசுப் பள்ளிகளில் உள்ள மாணவர் சேரும் நிலை இருப்பதும், ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பல லட்சம் ரூபாய் செலவழித்து பயன்பெற முடியாத யதார்த்த நிலை குறித்தும் கேட்டபோது, மூத்த நீதிபதி கிருபாகரன் கண்களில் நீர் வழிந்தோடியது என்று செய்திகள் கூறுகின்றன!
தமிழ்நாட்டு மெத்தனம் குறித்து நீதிபதிகள்கூட கண்ணீர் விடும் காட்சி அசாதாரணமானது அல்லவா? நிலைமை எவ்வளவு மோசமானதா கியிருந்தால், இப்படி ஒரு காட்சி அவலம் ஏற்பட்டிருக்க முடியும்?
வரவேற்கத்தக்கது
தமிழ்நாட்டு ஆளுங்கட்சியை மிரட்டிடும் வித்தைகளை, வாய்ப்புக் கிட்டும் போதெல்லாம் மத்திய பாஜக ஆட்சி செய்வதும், குட்டக் குட்டக் குனிந்து போகும் தமிழக அரசின் எல்லையற்ற சகிப்புத்தன்மையையும் உலகம் காண்கின்றது.ஆளுநர் ஏற்கெனவே உச்ச நீதிமன்றமே தடையில்லை என்று கூறிய எழுவர் விடுதலை சம்பந்தமாகப் பிடிவாதமாக முரண்டு பிடித்து கோப்புகளை வைத்துள்ள நிலைபோல, இந்த நீட் தேர்வு உள் ஒதுக்கீடு சட்டத்திலும்கூட உடனடியாகத் தனது ஒப்புதலை அல்லது காரண காரியங்களை மறுப்புடன் கூடிய திருப்பி அனுப்புதலோ செய்யாமல் இருப்பது, எவ்வகையில் நியாயம் ஆகும்?இதில் தமிழ்நாடு அரசு ஒரு நிலைப்பாட்டை எடுத்து, அந்த இட ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வரும்வரை இவ்வாண்டு கலந்துரையாடல் நடைபெறாது என்று கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒரு உத்திதான். உறுதியுடன் இறுதிவரை இருந்தால் சரி.நீதிபதிகள் வருந்தி கண்கலங்கும் அளவுக்கு சமூக நீதி இங்கு திட்டமிட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவது, எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல.இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.