tamilnadu

img

ஸ்மார்ட்சிட்டி, நகராட்சி, மாநகராட்சி கடை வாடகை பிரச்சனை

முதல்வரிடம் வணிகர் சங்க பேரமைப்பு மனு 

சென்னை, செப். 18- ஸ்மார்ட்டிசிட்டி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை, சொத்துவரி, பிளாஸ்டிக், டிஜிட்டல் பிரிண்டிங், வணிகர்நலவாரியம் போன்றவற்றில் உள்ள, வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகள் சம்பந்தமாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் மாநிலப் பொருளாளர் ஹாஜி ஏ.எம்.சதக்கத்துல்லா, மண்டலத் தலைவர்கள் கே.ஜோதிலிங்கம், சூலூர் டி.ஆர்.சந்திரசேகரன், எம்.ராதாகிருஷ்ணன், மாநில செய்தித் தொடர்பாளர் பி.பாண்டியராஜன், கூடுதல் செயலாளர் ஆர்.ராஜ்குமார் உள்ளிட்டோர் தமிழக முதல்வரை சந்தித்து மனு அளித்தனர்.  அந்த மனுவின் விவரம் வருமாறு:-

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழகத்தில் 12 மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வேலூர், தஞ்சை, மதுரை, திருநெல்வேலி, திருப்பூர், சேலம் ஆகிய 6 மாநகராட்சிகளில் உள்ள மாநகராட்சி வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட்டுகளில் சுமார் 9 ஆயிரம் கடைகள் உள்ளன.  அவை தற்சமயம் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ளது. தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி அறிவிப்பினால் சுமார் 50 ஆயிரம் வணிகக் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுவார்கள். தற்போது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் வரவிருப்பதால், கடைகளை காலிசெய்வது, பேருந்து நிலையத்தை மாற்றுவது, காய்கறி மார்க்கெட், மளிகை மார்க்கெட் போன்றவற்றை இடம் மாற்றம் செய்வது என்பது பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொண்டு, பண்டிகைக் காலம் முடியும்வரை கால நீட்டிப்பு வழங்க வேண்டும். மேலும் தற்போது உள்ள அரசு விதிகளின்படி, ஸ்மார்ட் சிட்டி கடைகளை கட்டி முடித்தபின் ஏல முறையை கொண்டு வராமல், சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து,  தற்போது கடை நடத்தி வரும் வணிகர்களுக்கே கடைகளை மீண்டும் அளிக்க வேண்டும்.

இதுவரை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 விழுக்காடு வாடகை உயர்வினை உள்ளாட்சிக் கடை வணிகர்கள் செலுத்தி வருகின்றார்கள். தற்போது மாநகராட்சி, நகராட்சி கடைகளின் வாடகை 50 விழுக்காடு முதல் 1500 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வாடகை உயர்வினால் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி கடை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே,  உடனடியாக அரசு இதனை மறுபரிசீலனை செய்து நியாயமான வாடகையை அறிவிக்க வேண்டும். செயல்படாமல் இருக்கும் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தை சீரமைத்து, 60 வயதை கடந்த வணிகர்களுக்கு ஓய்வூதியம், சிறு-குறு வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன்கள் போன்ற நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டும். வணிகக் கட்டிடங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 100 விழுக்காடு சொத்துவரி உயர்வை  பொருளாதார தேக்க நிலையை கருத்தில் கொண்டு, வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட 50 விழுக்காடாக குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.