சிதம்பரம், ஆக. 8- கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை, பொன்னந்திட்டு உட்பட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் இறால் பண்ணைகள் உள்ளது. இந்த இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகில் ஓடும் பக்கிங்காம் கால்வாயில் கலக்கிறது. இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரம், விவசாயம் போன்றவை கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என இப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் இதுவரை எந்த தீர்வும் ஏற்படாததால் ஏமாற்றமடைந்த இப்பகுதி பொதுமக்கள் சுமார் 100 பேர் நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினர் கற்பனைச்செல்வம் ஆகியோர் தலைமையில் விதிமுறைகளை மீறி செயல்படும் இறால் பண்ணைகளை தடை செய்யக்கோரி பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த கடலூர் மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் ரேணுகா, பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இறால் பண்ணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர். இதைக் கேட்ட அவர், இந்த பிரச்னை குறித்து 15 தினங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.