சென்னை சைதாப்பேட்டையில் பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்த விபத்து தொடர்பாக மேலாளர் வினோத் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் நேற்று இரவு பெய்த கனமழையில், சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கின் மேற்கூரை சரிந்து அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பெட்ரோல் பங்க் ஊழியர் கந்தசாமி (56) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்கள் 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தைத் தொடர்ந்து பெட்ரோல் பங்க்கிற்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், மேலாளர் வினோத்தை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவான பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்கை போலீசார் தேடிவருகின்றனர்.