சென்னை,மே 10- அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து வெளியிட்டுள்ள அரசாணையைத் திரும்பப்பெற வலியுறுத்தி மே-13ல் வயிற்றில் ஈரத்துணி கட்டி நூதன வடிவில் போராட்டம் நடத்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் 2020 மே 9 அன்று இணையம் வழி நடைபெற்றது. மாநிலத்தலைவர் என்.ரெஜீஸ்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலச்செயலாளர் எஸ்.பாலா, மாநிலப்பொருளாளர் தீபா உள்ளிட்டு மாநில நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
இந்தியா முழுவதும் பலகோடி இளைஞர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் 85 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காகக் காத்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக மத்திய, மாநில அரசுகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பதிலாக இருக்கிற வேலைவாய்ப்புகளையும் பறிக்கிற நடவடிக்கைகளையே மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கையின் ஒருபகுதியாகத் தமிழக அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 58லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது. ஏற்கனவே அரசாணை 56ஐ பிறப்பித்து அரசுப் பணியிடங்களை இல்லாமல் ஆக்குவது, காளியாகவுள்ள அரசு ஊழியர், ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவது, புதிய பணிநியமனங்களை நிரந்தரப் பணியாளராக நிரப்பாமல் தற்காலிக அல்லது ஒப்பந்தப் பணியாளராக நியமனம் செய்வது எனத் தமிழக அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்புக் கனவில் மண்ணள்ளிப்போட்டு வருகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாக சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டுவருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் 50000 சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டதால் 5 லட்சம் பேர் வேலையிழந்ததாகத் தமிழக அரசு சட்டமன்றத்தில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலைமை இன்னும் மோசமடைந்துள்ளது. பெரும் தனியார் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக என்று சொல்லி அரசு மேற்கொண்ட ஊரடங்கு நடவடிக்கை ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சின்னாபின்னமாக்கியுள்ளது. இது வேலைவாய்ப்புச் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார அறிஞர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, பொருளாதார சிக்கலிலிருந்து மீண்டெழுவதற்கு வேலைவாய்ப்புகளைப் பெருக்கவேண்டும், மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார அறிஞர்கள் அறிவுறுத்துகின்றனர்.
ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதற்கு நேரேதிர் திசையில் பயணிக்கின்றன. ஏற்கனவே, மத்திய அரசு தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. எனவே, அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை அதிகரித்து வெளியிட்டுள்ள அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி 2020 மே 13ல் தமிழகம் முழுவதும் வயிற்றில் ஈரத்துணி கட்டி நூதன வடிவில் போராட்டம் நடைபெறும். தமிழக அரசின் இளைஞர் விரோத நடவடிக்கைக்கு எதிராக நடைபெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்துத் தரப்பு இளைஞர்களும் கலந்துகொண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பவேண்டுமெனத் தமிழக இளைஞர்களுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.