சென்னை,செப்.25- அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக உருவாக்கப்பட்ட தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் 80-வது வாரியக் கூட்டம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், தொழிலாளர் நலவாரியக் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது
இக்கூட்டத்தில் அமைச்சர் பேசுகை யில், சட்டபேரவை அறிவிப்பின்படி சென்னை, மாமல்லபுரம், குற்றாலம் மற்றும் வால்பாறை ஆகிய இடங்களில் புதிய ஓய்வு இல்லங்கள், புதுப்பிக்கப்பட்ட ஓய்வு இல்லங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. வாரிய நலத்திட்டப் பயன்கள் அதிக தொழிலாளர்களுக்கு கிடைப்பதற்கு ஏதுவாக தற்போதுள்ள ஊதிய உச்ச வரம்பு ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியத்தின் மூலம் 30,134 தொழிலாளர்களுக்கு ரூ.12.54 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. திருமண உதவித் தொகையாக 3,264 பயனாளிகளுக்கு ரூ.4.27 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 902 வாரிசுதாரர்களுக்கு ரூ.2.88 கோடியும், விபத்து மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித் தொகை 241 வாரிசுதாரர்களுக்கு ரூ.2.85 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
திருமண உதவித் தொகை, கடந்தாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. தற்போது, இது ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.
மாமல்லபுரம் ஓய்வு இல்லம் திறக்கப்படாமல் உள்ளது குறித்தும் இந்திய தணிக்கைத்துறை தலைவரின் அறிக்கையில் முந்தைய அதிமுக ஆட்சியின்போது அமைப்புசாரா நலவாரியத்தில் நடந்த ஏராளமான குளறுபடிகள், முறைகேடுகள் குறித்த அதிர்ச்சி தகவல்களை விரிவாக தீக்கதிரில் வெளியிட்டிருந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.