தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு அமர்வில் நீட் விலக்கு மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 13 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில், தமிழகத்திற்கு நீட் விலக்கு கோரும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இந்த நீட் விலக்கு மசோதா, பொருளாதார ரீதியில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறி, கடந்த 1 ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மசோதாவை திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை துவங்கியது. மீண்டும் நீட் விலக்கு மசோதா பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நீட் விலக்கு மசோதா இன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதேபோல இளங்கலை படிப்பான எம்பிபிஎஸ் படிப்பிற்கு 12 ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டுமே போதுமானதாக இருக்கும். நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கு ஏற்புடையது அல்ல என்ற வகையிலே முதலமைச்சர் கருத்தை இறுதியாக தெரிவித்திருந்தார்.
2வது முறையாக சட்டப்பேரவையிலிருந்து இது அனுப்பி வைக்கக்கூடிய காரணத்தால் அரசியல் அமைப்பு விதிகளின்படி, இந்த முறை ஆளுநர் அதை நிராகரிக்க முடியாது. நிச்சயமாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்ற பாஜகவினர் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றுவதற்கு முன்னதாகவே வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.