tamilnadu

img

புதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிச.15 வரை கால நீட்டிப்பு செய்க!

சென்னை,டிச.1-  புதிய வாக்காளர் சேர்க்கும் பணியை டிசம்பர் 15 ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் டிசம்பர் 1 புதனன்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:   கடந்த மாதம் நடைபெற்ற அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சுருக்குமுறை திருத்தத்தின் மூலம் இறுதி செய்வது குறித்த கால அட்டவணை உறுதி செய்யப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தமிழகத்தில் நவம்பர் மாதம் முழுவதும் கன மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை இணைக்கும் பணியை போன்று இந்த ஆண்டு இந்த பணி முழுமையாக நிறைவேறவில்லை. ஆனால், தேர்தல் ஆணையம் 30.11.2021 உடன் வாக்காளர் சேர்க்கும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைப்பு கோருபவர்கள் 2022 ஜனவரி 5 ஆம் தேதிக்கு பின்னர் தான் அதைச் செய்ய முடியும் என்ற நிலைமை உள்ளது. எனவே, நவம்பர் 30 உடன் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்துள்ள புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணியின் கால அவகாசத்தை டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டித்து,  இளந்தலைமுறையினர் வாக்களிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். 

;