tamilnadu

img

தொடரும் அதிர்ச்சி - மீண்டும் ஒரு மின்சார வாகனத்தில் தீ!  

சென்னையில் பியூர் இவி மின்சார இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அம்பத்தூர் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கம் போல் பணி முடிந்து இன்று மாலை தந்தையின் வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது திருவொற்றியூர் - மணலி மாதவரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அவருடைய பியூர் இவி மின்சார வாகனத்திலிருந்து வழக்கத்துக்கு மாறான சத்தம் வருவதை கேட்டு சாலையோரம் வண்டியை நிறுத்தியிருக்கிறார்.

அப்போது திடீரென மின்சார வாகனத்திலிருந்து புகை வந்த நிலையில் சில நொடிகளில் மின்சார வாகனம் தீப்பிடித்து மளமளவென எரியத் தொடங்கியது.  அந்த நேரம் தமிழக குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தண்ணீர் லாரி வந்ததையடுத்து எரிந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீ அணைக்கப்பட்டது.

தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் மின்சார வாகனங்கள் வைத்திருக்கும் உரிமையாளர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.  

முன்னதாக ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஒகினாவா ஆட்டோடெக் தயாரிக்கும் மின்சார இரு சக்கர வாகனங்களில் இதேபோன்ற சம்பவங்கள் இரண்டு முறை நடந்துள்ளது. மேலும் மின்சார ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்த மற்றொரு சம்பவம் தமிழகத்தின் திருச்சியில் திங்கள்கிழமை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.