tamilnadu

img

மீனவப் பெண்மணியின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கிடுக- தமிழக முதல்வருக்கு சிபிஎம் கடிதம்

ராமேஸ்வரத்தில் படுகொலை செய்யப்பட்ட மீனவப் பெண்மணியின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிடவும், பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெறவும், தமிழக முதலமைச்சருக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்திருக்கும் செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,

ராமேஸ்வரம் மாவட்டம், ராமேஸ்வரம் தாலுக்கா, தங்கச்சி மடம் ஊராட்சி, வடகாடு கிராமத்தைச் சேர்ந்த பாலுவின் மனைவி சந்திரா, கடந்த 24.05.2022 அன்று ஒரிசா மாநிலத்தை சேர்ந்த 6 பேர்களால் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு, மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டார். அவருடைய குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும், அவருடைய மகளுக்கு அரசு பணி வழங்க வேண்டுமெனவும் ஏற்கனவே எங்கள் கட்சியின் சார்பாக தங்களுக்கு பத்திரிகைகளின் வாயிலாக கோரிக்கை வைத்திருந்தோம் என்பதை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த மீனவப் பெண்மணி சந்திரா படுகொலை செய்யப்பட்டுள்ளதால் அக்குடும்பம் நிர்க்கதியாக உள்ளது. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கருணையுடன் பரிசீலித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

1) படுகொலை செய்யப்பட்ட மீனவப் பெண்மணி குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் தமிழக அரசு நிதி உதவி வழங்கிட வேண்டும்.

2) படுகொலை செய்யப்பட்ட சந்திராவின் மகளுக்கு (+2 படிக்கும்) அரசுப்பணி வழங்க வேண்டும். மீன்வளத்துறை அலுவலகம் ராமேஸ்வரத்திலும், மீன்வளத்துறை துணை இயக்குநர் அலுவலகம் ராமநாதபுரத்திலும் உள்ளது. இங்கு காலியிடமும் உள்ளதாக தெரிகிறது. எனவே, இந்த அலுவலகங்களில் ஏதாவது ஒரு அலுவலகத்தில் அரசுப்பணி வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

3)            சந்திராவின் குடும்பத்தினர் தற்போது குடிசை வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வீட்டை மாற்றி அரசு இலவச வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் வீடு கட்டி கொடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

 மேலும், மீனவப் பெண் சந்திரா கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு ஆத்திரமுற்ற கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், ஆத்திரமடைந்து செய்வதறியாது குற்றவாளிகள் வேலை செய்து வந்த இறால் பண்ணையின் குடிசையை தாக்கியுள்ளனர்.

  இதனால் கிராம மக்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இந்த இரண்டு வழக்குகளையும் உடனடியாக எவ்வித நிபந்தனையுமின்றி ரத்து செய்ய வேண்டுமெனவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.