tamilnadu

img

செய்தியாளர் படுகொலை: தலைவர்கள் கண்டனம்...

சென்னை:
தனியார் தொலைக் காட்சி செய்தியாளர் மோசஸ் (27) சட்ட விரோத கும்பலால் படுகொலை செய்யப்பட்டிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித் துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-காஞ்சிபுரம் மாவட்டம் திருபெரும்புதூர் அருகே உள்ள நல்லூர் கிராமத்தை சேர்ந்த மோசஸ் தனியார் தொலைக்காட்சியில் பகுதி நேர செய்தியாளராக பணியாற்றி வந்தார்.இந்தப் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத, சமூக விரோத செயல்களை துப்பறிந்து ஆதாரப்பூர்வமாக செய்திகளை வெளியிட்டு வருபவர். இதன் தொடர்ச்சியாக இப்பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பது மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வது ஆகிய சமூக விரோத செயல்கள் குறித்து அண்மையில் ஆதாரப்பூர்வமாக தொலைக் காட்சியில் செய்தி வெளியிட்டார்.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பல்கள் கூட்டுச் சேர்ந்து செய்தியாளர் மோசஸை கொடூரமாக படுகொலை செய்துள்ளன.இந்த குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத் துறையின் சுதந்திரத்தையும், அதில் பணிபுரிகிற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் அனைவரையும் பாதுகாப்பது அரசின் கடமைப் பொறுப்பாகும். இந்தச் சம்பவத்தில் உயிர் பலியான மோசஸ் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்கி பாதுகாக்க வேண்டுமென்று, தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கி.வீரமணி
திராவிடர் கழக தலைவர் கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழன் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் என்பவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடும் கண்டனத் திற்குரியது.சமூகவிரோதிகள் குறித்த செய்தியை வெளியிட்டமைக்காக கொலை செய்யப் பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.தமிழ்நாட்டில் கூலிப் படையினரைக் கொண்டு கொலைகள் நடத்தப்படுவது பெருகியுள்ளது. இதைப் பலமுறை நாம் சுட்டிக்காட்டியுள்ளோம்.ஜனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிகைத் துறையினருக்குப் பாதுகாப்பில்லாத சூழல் அரசுக்கும், காவல்துறைக்கும் பெருமை சேர்ப்பதல்ல.அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்துக் குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும். இதைத் தனிப்பட்ட ஒரு பத்திரிகையாளருக்கு ஏற்பட்ட ஒன்றாகக் கருதாமல், ஒட்டுமொத்த ஊடகத் துறையினருக்கான சவாலாகக் கருதி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு வீரமணி தெரிவித்துள்ளார்.தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.