tamilnadu

img

தமிழ் கல்வெட்டுக்களை பாதுகாத்து, ஆவணப்படுத்துக.. உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு....

சென்னை:
தமிழ் கல்வெட்டுக்களை பாதுகாத்து, ஆவணப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  அனைத்து தமிழ் கல்வெட்டுக்களையும் சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்றும்,  கல்வெட்டியல் பிரிவுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

மைசூரு மத்திய தொல்லியல் துறை மண்டல அலுவலகம் உட்பட நாடு முழுவதும் உள்ள தமிழ் கல்வெட்டுக்களை 6 மாதங்களுக்குள் சென்னைக்கு கொண்டு வர வேண்டும் என்றும்,  சென்னையில் உள்ள தொல்லியல் கல்வெட்டு பிரிவு அலுவலகத்தின் பெயரை “தமிழ் கல்வெட்டியல் பிரிவு அலுவலகம்” என மாற்றம் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வரவேற்கிறது.தமிழ் கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள் மற்றும் தொல்லியல் சின்னங்கள் அனைத்தையும் பாதுகாத்து டிஜிட்டல்மயமாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஒன்றிய அரசின் பொறுப்பில் உள்ள மைசூரு மத்திய தொல்லியல் துறையின் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள தமிழ் கல்வெட்டுக்கள் பராமரிப்பின்றியும், படியெடுத்து பாதுகாக்கப்படாமலும்  அழிந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள பழமையான தமிழ் கல்வெட்டுகளும் போதிய பராமரிப்பின்றி ஆவணப்படுத்தப்படாமல் சேதமடைந்து வருகின்றன.

இவை வெறும் கல்வெட்டுக்கள் அல்ல, தமிழக சமூக பண்பாட்டு வரலாற்றின் அரிய ஆவணங்கள் என்பதை கருத்தில் கொண்டு உயர்நீதிமன்றம் பொருத்தமான உத்தரவை பிறப்பித்துள்ளது.சென்னையில் உள்ள தொல்லியல் கல்வெட்டுப்பிரிவு அலுவலகத்திற்கு தேவையான பணியாளர்கள் உட்பட அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து தமிழக வரலாற்றில் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;