10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் முடியும் வரை தமிழகத்தில் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என மின்வாரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோடைக் காலத்தின் போது தமிழ்நாடு முழுவதும் சீரான மின்சார விநியோகம் வழங்குவது குறித்து தமிழ்நாடு நிதித்துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மின்வாரிய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் மூலம், மாநிலத்தின் கோடைக்கால மின் தேவையை முழுமையாக எந்தவித பற்றாக்குறையும் இல்லாமல் பூர்த்தி செய்யப்படும். மேலும், கோடைக்காலத்தில் மின் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளைப் போர்க்கால அடிப்படையில் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மின்பராமரிப்பு பணிகளுக்கான 2,32,896 மின்கம்பங்கள் 17,918 மின்மாற்றிகள் மற்றும் 12,500 கி.மீ மின்கம்பிகள் உள்ளிட்ட முக்கிய தளவாட பொருட்கள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சரிடம் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 10 , 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில், தேர்வு காலம் முடியும் வரை தமிழகம் முழுவதும் மின் நிறுத்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். மேலும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புக்கான மின் நிறுத்தம் ஏதும் மேற்கொள்ள வேண்டாம் என அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.