tamilnadu

img

குளம் மாயம்: ஆவணங்களுடன் அதிகாரிகள் ஆஜராக உத்தரவு

சென்னை:
குளம் காணாமல் போனதாக தொடர்ந்த வழக்கில் அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகிற 24-ந்தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில்  ‘விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் தாலுகா வெள்ளிமேடு பேட்டை கிராமத்தில் 200 ஆண்டுகளுக்கு மேலாகக் கோமுட்டி குளம் இருந்ததாகவும்  கட்டிடக் கழிவுகளைப் போட்டு, முன்னாள் கிராம பஞ்சாயத்துத் தலைவர் ராஜதுரை நிரப்பி, குளத்தைக் காணாமல் ஆக்கி விட்டதாக அதே கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியுள்ளார். இதற்கு கிராம நிர்வாக அலுவலர், திண்டிவனம் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர்.

இந்தநிலையில், குளம் இருந்த இடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இருப்பதாக கிராம பதிவேட்டில் வட்டாட்சியர் திருத்தம் செய்துள்ளார். இதன்மூலம் பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி வந்த குளம் காணாமல் போய் விட்டது. எனவே, குளத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றும் குளத்தை மூடிய முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு புகார் மனு கொடுத்தும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை என்றும் அந்த வழக்கறிஞர் கூறியிருந்தார்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், சேஷசாயி ஆகியோர்  குளம் தொடர்பான வருவாய்த்துறை ஆவணங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் தனித்தனியாகப் பதில் மனுத் தாக்கல் செய்தனர்.‘ஏ’ ரிஜிஸ்டரில் சம்மந்தப்பட்ட சர்வே எண்ணில், மாரியம்மன் கோவில் உள்ளது. அங்குக் குளம் இல்லை. ஆரம்பச் சுகாதார மையம் உள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால், கிராம வரை படத்தில் (எப்.எம்.) அங்கு குளம் உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மாறுபட்ட தகவல்களுடன் பதில் மனுக்களை அதிகாரிகள் தாக்கல் செய்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது மனுதாரர் குறுக்கிட்டு, எங்கள் ஊரில் பல ஆண்டுகளாக இருந்த குளத்தை காணவில்லை. அதிகாரிகள் ஆவணங்களைத் திருத்தி, அதைக் காணாமல் ஆக்கி விட்டனர் என்று கூறினார்.ஏ’ ரிஜிஸ்டரில் குளம் இல்லை என்றும் கிராம வரைபடத்தில் குளம் உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை யார் செய்தது? ‘ஏ’ ரிஜிஸ்டரில் மாற்றப்பட்டதா? இல்லை வரைபடத்தில் மாற்றப்பட்டதா?’ என்று நீதிபதிகள் கேள்விகள் கேட்டனர். இதற்கு அரசு தரப்பில் சரியான பதில் தெரிவிக்கவில்லை. இதையடுத்து, கோமுட்டி குளம் இருந்ததா? இல்லையா? என்பதற்கு அனைத்து ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வருகிற 24ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

;