tamilnadu

img

போலீஸ் டிஜிபி, உள்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு

சென்னை,ஜூலை 4- நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், போலீஸ் டிஜிபி ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆயுதப்படை காவலர்கள் ராம்குமார், ராமச்சந்திரன் உள்ளிட்ட 157 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தனர். அதில் தங்களுக்கு பணி உயர்வு வழங்கும் போது, ஊதிய முரண்பாடு உள்ளதாகவும், தங்களுக்கு ஜூனியராக உள்ளவர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்கள் என்றும் இதனால் தங்களின் பணிவரன் முறையில் குளறுபடி உள்ளது என்றும் தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்து ஊதிய முரண்பாட்டை கலைய வேண்டும் என்று கடந்த 2018 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தார்.  நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று ஆயுதப்படை காவலர்கள் 157 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிபதி டி. ராஜா முன்பு நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதால் வழக்கை தள்ளிவைக்க வேண்டும் என்றார். அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் நான்கு வாரத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.