சென்னை:
ஊரடங்கு கால நிவாரணமாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் இம்மாதம் 10 ஆம் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் நடத்த முடிவு செய் துள்ளது.
கொரோனா பேரிடர் ஊரடங்கு 5-வது முறையாக ஜூன்-30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு காலம் நீட்டிக்கப்படும் என்பதும் தெரியவில்லை. கடந்த இரண்டரை மாதங்களாக ஏற்கனவே கிடைத்து வந்த குறைந்தபட்ச வருவாய் களைக்கூட இழந்து, மாற்றுத் திறனாளிகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். மருந்து, மாத்திரை மற்றும் அத்தியாவசிய உபகரணங் கள்கூட வாங்க முடியாமல் மாற்றுத்திறனாளிகளும், அவர்களின் குடும்பங்களும் துயரத்தில் உள்ளனர். பல்வேறு ஊடகங்களும் இந்த தவிப்புகளை படம்பிடித்துக் காட்டியுள்ளன.இந்த துயரங்களை துடைக்கவும், பொருளாதார தேவைகளை ஈடு செய்யவும், குறைந்தபட்சம் இந்த ஊரடங்கு காலத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் மாதம் தலா ரூ.5000 வழங்க வேண்டுமென மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் வைக்கப்பட்டது.ஆனால், மாற்றுத்திறனாளிகளின் இந்த கோரிக்கையை உதாசீனப்படுத்தும் வகையிலேயே மத்திய, மாநில அரசுகள் செயல் பட்டு வருகின்றன.
மாற்றுத்திறனாளிகளை ஏமாற்றும் விதங்களிலேயே உண்மைக்கு புறம்பான செய்திகளை தமிழக அரசும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையும் பரப்பி வருகின்றன. சென்னை உயர்நீதிமன்றமே இதனை சுட்டிக்காட்டியுள்ளது. அரசின் இந்தப் போக்குகள் மாற்றுத் திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே, இம் மாதம்10 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மாநில ஆணையர் அலுவலகம் முன்பாகவும், மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் முன்பாகவும் கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் முடிவு அறிவித்துள்ளது.