tamilnadu

img

சிஏஏ சட்டத்தை இயற்றிய பாஜக, ஆதரித்த அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்

சென்னை, மார்ச் 11-  குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்க ளித்த அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்ட்ர் பதிவில், குடியுரிமை என்ற மனிதநேயக் கொள்கையை மதம் - இனத்தால் வேறுபடுத்தும் பிளவு வாதக் கொள்கையாக மாற்றியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இசுலாமிய மதத்தவரையும், இலங்கைத் தமிழ ரையும் வஞ்சிக்கும் #Citizenship AmendmentAct-ஐ இயற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. அதனை  திமுக உள்ளிட்ட ஜனநாயகச் சக்திகள் கடுமையாக நாடாளுமன்றத்தில் எதிர்த்தன. ஆனால் பா.ஜ.க.வின் பாதம் தாங்கியான அ.தி.மு.க. ஆதரித்து வாக்களித்ததால்தான் அச்சட்டம் நிறைவேறியது.

மக்கள் எதிர்ப்பு காரணமாக அந்தச் சட்டத்தை இதுநாள் வரையில் அமல்படுத்தாமல் வைத்திருந்தது பா.ஜ.க. திமுக அரசு ஆட்சிப் பொறுப் பேற்ற பிறகு, கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 8-ஆம் நாள், இந்திய நாட்டின் ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் போற்றிப் பாது காக்கவும், அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பின்மைக் கோட்பாட்டினை நிலைநிறுத்தவும், இந்திய குடி யுரிமைத் திருத்தச் சட்டம் - 2019-ஐ, ரத்து செய்திட ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்ட மன்றத்தில் அரசினர் தனித் தீர்மானத்தை நிறைவேற்றினோம்.

இப்போது, தேர்தலில் தனது அனைத்து அஸ்திரங்களும் எடு படாமல் போன நிலையில் குடி யுரிமைத் திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலமாகக் கரையேற முயற்சிக்கிறார் பிரதமர் மோடி. தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி அரசியல் ஆதாயம் அடையப் பார்க்கிறார் பிரதமர். அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டத்தைக் கொண்டு வந்த பா.ஜ.க.வையும், அந்தச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த அடிமை அ.தி.மு.க.வையும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்! தக்க பாடம் புகட்டுவார்கள் என்று அதில் முதல்வர் தெரிவித்துள்ளார்.