tamilnadu

காலிக்குடங்களுடன் அலையும் மக்கள் போரூர் ஏரியை தூர்வார வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 5 -போரூர் ஏரியை சுற்றியுள்ள மக்கள் தண்ணீருக்காக காலிக் குடங்களுடன் அலைகின்றனர். எனவே, போரூர் ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக போரூர் ஏரி பாதுகாப்பு மக்கள் குழுவின் க.பீம்ராவ் திங்களன்று (ஜூன் 3) பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர், தலைமை பொறியாளர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,பொதுப் பணித்துறை கொசஸ்தலை ஆற்றுப்படுகை நிர்வாக பொறியாளர் ஆகியோரை சந்தித்து மனு அளித்தார்.அந்த மனுவில், மழைக்காலங்களில் போரூர்ஏரியின் முழுக் கொள்ளவிற்கு நீரை சேகரித்து வைக்க முடியவில்லை. தற்போது நிலவும் வறட்சியில் போரூர் ஏரி வறண்டுள்ளது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. எனவே, ஏரியின் முழுக்கொள்ளவிற்கு தண்ணீரை சேகரித்து வைத்து பராமரிக்க வேண்டும்.ஆகவே, பருவமழை தொடங்கும் முன்பாக, ஏரியை தூர்வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்த வேண்டும். ஏரிக்கரைகளை உயர்த்தி, பலப்படுத்தி, நடைபாதை அமைக்க வேண்டும். நீர்வரத்துக் கால்வாய்களை உயர் நீதிமன்ற ஆணைப்படி தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும், ஏரியில் குப்பை கொட்டாமல், கழிவு நீர் கலக்காமல் தடுப்பதோடு, தனியார்நீர் எடுப்பதை தடுக்க வேண்டும், ஏரியை 24 மணி நேரமும் கண்காணிக்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.இந்நிகழ்வின்போது மக்கள் குழுவின் செயலாளர் கே. தண்டபாணி, பொருளாளர் மங்களா நகர்ஜி.நடராஜன், நிர்வாகிகள்ஜனா, எம்.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.