tamilnadu

img

ரூ.1762 கோடி நிலுவைத்தொகை வழங்குக... போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டம்

சென்னை:
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர் களுக்கு போக்குவரத்துக்கழகங்கள் வழங்க வேண்டிய 1762 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தர வலியுறுத்தி அக்டோபர் 22 வியாழனன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு சரண் சம்பளம், ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவற்றை கடந்த 5 ஆண்டுகளாக உரிய நேரத்தில் வழங்காமல் உள்ளனர். 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் மாதம் வரை 6221 தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 1625 கோடி ரூபாயை போக்குவரத்துக்கழகங்கள் வழங்காமல் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்ற 684 பேருக்கு 137 கோடி ரூபாய் வழங்க வேண்டும். மொத்தத்தில் 6905 தொழிலாளர்களுக்கு போக்குவரத்துக்கழகங்கள் 1762 கோடி ரூபாய் வழங்காமல் உள்ளது. இந்த தொகையை பெற்றுத்தர வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு சட்டத்திற்குட்பட்டு தாமதமின்றி பணப்பலன்களை வழங்க வேண்டும்.

2008 முதல் 2015 வரை பணியிலிருந்த காலத்தில் விடுப்பு சரண்டர் செய்ததற்கான சரண்டர் விடுப்பு சம்பளத்தை வழங்க வேண்டும். தொழிற்தகராறு சட்டப்படி 12(3) ஒப்பந்தப்படி ஒப்பந்த காலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கும் உயர்வுத் தொகைகளை வழங்க வேண்டும். போனஸ், ஊக்கத்தொகை  போன்றவற்றை பணியிலிருப்பவர்களுக்கு வழங்கும்போதே ஓய்வுபெற்றவர்களுக்கும் வழங்க வேண்டும். பணிக்கொடை பட்டுவாடா சட்டம் 1972-ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை கிளை தலைவர் நீலமேகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கே.கர்சன், சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன், சென்னை கிளைச் செயலாளர் ஏ.வீரராகவன், முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து சங்க நிர்வாகிகள் தொழிலாளர் நல இணை ஆணையர் லட்சுமிகாந்தனிடம் மனு அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அனைத்து போக்குவரத்துக்கழக பொது மேலாளர்களையும் அழைத்து நவம்பர் 27 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று உறுதி அளித்தார்.