tamilnadu

ஆக்கப்பூர்வமான, மனித நேயமிக்க செயல்பாட்டுக்குச் சொந்தக்காரர்

ஒரு வேளை..

உங்களுக்கு எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்றால்..

உங்கள் தொகுதியில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தகுதி பார்த்து வாக்களிப்பதே சிறந்த முடிவாகும்.
உதாரணமாக.. 

மதுரையில் வேட்பாளராக கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும்  சு.வெங்கடேசனைச்சுட்டிக் காட்டுவேன். இவர் மீது இதுவரை எந்த மாற்றுக் கட்சியினரும் எந்தக் குற்றச்சாட்டும் வைத்ததில்லை.

இவரின் மேடைப் பேச்சுகளில், நாடாளுமன்ற பேச்சுகளில், பேட்டிகளில் என்றுமே நாகரிகம் தவறியதில்லை.

இவரின் ஆக்கப்பூர்வமான மனிதநேயமிக்க  செயல்பாடுகளுக்கு இரண்டு உதாரணங்கள்.

மதுரையில் திருமதி பூரணம் என்கிற வங்கி ஊழியர் தன் கிராமத்தில் பள்ளி கட்டுவதற்காக தன் ஏழரை கோடி மதிப்புள்ள நிலத்தை
பள்ளிக்கு எழுதிவைத்தார். இந்தச் செய்தி அறிந்ததும் அந்தப் பெண்மணியைத் தேடிச் சென்று பாராட்டி வாழ்த்தினார் எம்.பி.

எக்மோரில் நான்காம் நடைமேடையிலிருந்து புறப்பட வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ்  ஐந்தாம் நடைமேடையிலிருந்து புறப்படும் என்று திடீரென்று அறிவிப்பு
வருகிறது.அன்று பயணம் செய்ய வந்த ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு அவதி. 

அன்று பயணம் செய்ய வந்த இவர்நான்காம் நடைமேடையில் ஒரு ரயில் பயணிகள் யாருமின்றி நிறுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். ரயில்வே அதிகாரிகளை உடனே அழைத்து விசாரிக்கிறார். 

ஒரு ரயில்வே உயரதிகாரி தனிப்பட்ட முறையில் புறப்பட்டுச் செல்வதற்காக தயாராய் நிறுத்தப்பட்டிருக்கும் பத்து கோச்சுகள் கொண்ட தனியான சிறப்பு ரயில் அது என்று தயங்கிச் சொல்கிறார்கள்.

கொந்தளித்த இவர் உடனடியாக இந்தப் பழைய பிரிட்டிஷ் கால நடைமுறையை ஒழிக்க ரயில்வே மந்திரி உள்பட பலரையும் தொடர்புகொண்டு பேசுகிறார். கண்டித்து மெயில்கள் அனுப்புகிறார்.

1.6.19 முதல் 10.2.24 வரை நிகழ்ந்த நாடாளுமன்றக் கூட்டங்களில் இவரின் வருகைப் பதிவு சதவிகிதம் 73. 

கலந்துகொண்ட விவாதங்கள் 33. எழுப்பிய கேள்விகள் 256

ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக பதவியில் இருக்கும் ஒருவர் மீண்டும் தேர்தலில் நின்றால் அவரின் நாடாளுமன்ற செயல்பாடுகள் பற்றி இணையத்தில் தகவல் கிடைக்கும்.

இப்படி உதாரணங்களுடன் நல்ல வேட்பாளர்களை எல்லா கட்சிகளும் தங்கள் சின்னம், தலைவர்களின் பெருமை கடந்து அடையாளப்படுத்தி பரப்புரை செய்ய வேண்டும்.

நீங்களும் சுட்டிக்காட்டலாம்.

நமக்குத் தேவை திறமைமிக்க, செயலாற்றல் கொண்ட நாடாளுமன்றம்!மதுரையில் இவர் வெல்ல.. 

என் நல்வாழ்த்துகள்.

எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரன் (முகநூலில்)