tamilnadu

தோல்வி பயத்தில் பாஜக; அதிர்ச்சியில் ஓபிஎஸ், டிடிவி

சென்னை, மார்ச் 3 - தமிழகத்தில் பாஜக கூட்டணியில் தங்களுடைய தொழில் வளர்ச்சிக்காகவும், தொழிலை காப்பாற்றுவதற்காகவும், சுயலாபத்துக்காகவும் பாஜகவுடன் செல்வாக்கு இல்லாத கட்சிகள் தான் கூட்டணி அமைத்துள்ளன. நிர்வாகிகளே இல்லாத கட்சியில் உள்ள ஜி.கே.வாசன், வேலூரில் மட்டுமே சமுதாய பலத்தில் உள்ள ஏ.சி. சண்முகம், பெரம்பலூர் பகுதியில் மட்டும் தொண்டர்கள் பலம் கொண்ட பாரிவேந்தர், தென்மாவட்டங்களில் ஒருசாரார் ஆதரவு தெரிவிக்கும் ஜான் பாண்டியன், எந்த ஆதரவுமே இல்லாத தேவநாதன் யாதவ் போன்றவர்கள் தான் பாஜக கூட்டணியில் உள்ளனர். 

அதே நேரத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனி அணி அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு  வருகிறார். பாஜக, அதிமுக உறவு இனிமேல் கிடையாது என அக்கட்சியினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

அதே நேரத்தில் எப்படியேனும் அதிமுகவை கூட்டணிக்கு வர வைத்துவிடலாம் என்ற நினைப்பில், வலிய வந்து ஆதரவு கொடுக்கும் ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனின் ஆதரவை ஏற்று கொள்ளாமல் பாஜக இருந்து வருகிறது. இதுவரை இவர்களிடம் எந்த பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை. இதனால் ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். பாஜகவை நம்பித் தான் கட்சியில் இருந்து வெளியேறி னோம். இப்போது கட்சி பறிபோனது தான் மிச்சம் என்று புலம்ப தொடங்கிவிட்டனர். இதனால், திங்களன்று சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திப்பதை ஓபிஎஸ், டி.டி.வி. தினகரன் ஆகியார் புறக்கணித்துள்ளனர். கூட்டணியில் பெரிய கட்சிகள் சேர வாய்ப்பில்லை என்பதால் தமிழக பாஜக தோல்வி பயத்தில் இருக்கிறது.