சென்னை, அக். 25- சென்னை மெட்ரோ ரயிலில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 50 விழுக்காடு தள்ளுபடியில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி முதல் இந்த பாதிக் கட்டண சலுகை அமலுக்கு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை வண்ணாரப்பேட்டை - விமானநிலையம், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை இடையே 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. பல்வேறு வசதிகளை அளிப்பதன் மூலம் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் தற்போது இந்த ஆண்டில் வரும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 50 விழுக்காடு தள்ளுபடியில் (பாதி கட்டணம்) டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகிறது. ‘டிரிப் பாஸ்’ மற்றும் வரம்பற்ற சவாரிகளுக்கான ‘பாஸ்’ வைத்திருப்பவர்கள் தவிர மற்றவர்களுக்கு இந்த சலுகை அளிக்கப்படுகிறது. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை (அக். 27) தீபாவளி முதல் இந்த பாதி கட்டண சலுகை அமலுக்கு வருகிறது. மறுநாள் 28ஆம் தேதி (திங்கட்கிழமை) அரசு விடுமுறை நாள், அதேபோல் வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் கூடுதலான பயணிகள் பயன் அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அடுத்த ஆண்டும் இந்த திட்டம் தொடர்வது குறித்து பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.