tamilnadu

img

ஒமிக்ரான் பாதிப்பு : வீட்டு தனிமைக்கு அனுமதியில்லை - தனியார் மருத்துவமனைக்குச் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நபர்களை டிஸ்சார்ஜ் செய்தால், அதுதொடர்பான தகவல்களை தங்களுக்கு அளிக்குமாறு தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு நாளடைவில் அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்று பரவலைத் தீவிரமாகக் கண்காணிக்கும் வகையில் அனைத்து தனியார் மருத்துவமனைகளுக்கும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்கள் மருத்துவமனையில்தான் சிகிச்சை அளிக்க வேண்டும். 14 நாட்களுக்கு முன்னரே தொற்று பாதித்தவரை வீட்டுத் தனிமைக்கு அனுப்ப வேண்டுமென்றால், சென்னை மாநகராட்சிக்குக் கட்டாயம் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளது. 

மேலும், gccpvthospitalreports@chennaicorporation.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொற்று பாதிக்கப்பட்டவர் பெயர், முகவரி, தொலைப்பேசி எண், மருத்துவமனை பெயர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நாள், கிழமை உள்ளிட்ட முழு தகவலை அனுப்பி வைக்க வேண்டும். ஒருவர் மருத்துவமனை தனிமைப்படுத்தலில் இருப்பதா, கோவிட் சிகிச்சை மையத்தில் இருப்பதா, வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதா என்பதை மருத்துவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு ஒன்றிய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின் கீழும் தொற்று பாதிக்கப்பட்டவரின் வீட்டில் உள்ள வசதிகள் பொறுத்து முடிவு செய்யப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் உள்ள கன்சல்டேஷன் மருத்துவர்கள் மூலம் வீட்டுத் தனிமை சான்றிதழ் பெற்றுக்கொண்டு மருத்துவமனை தனிமைப்படுத்தலைச் சிலர் தவிர்க்கிறார்கள் எனப் புகார்கள் எழுந்த நிலையில் சென்னை மாநகராட்சி தீவிர கண்காணிப்பைத் தொடங்கியுள்ளது. 

;