கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அதிகரிப்பு
சென்னையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. மே.9 நிலவரப்படி 3 ஆயிரத்து 330 பேர் பாதிக்கப்பட்டு, 545பேர் குணமடைந்துள்ளனர். 27 பேர் இறந்துள்ளனர்.2 ஆயிரத்து 757 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதனையொட்டி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் 513லிருந்து 587ஆக உயரந்துள்ளது
5 மருத்துவர்களுக்கு கொரோனா
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மருத்துவர் மற்றும் 4 தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் என 5 பேருக்கு ஞாயிறன்று (மே 10) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
15 குழந்தைகளுக்கு கொரோனா
சென்னையில் ஒரே நாளில், பிறந்து ஒரு நாளே ஆனா குழந்தை உட்பட 15 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் ஆண் குழந்தைகள் 10 பேர், பெண் குழந்தைகள் 5 பேர் ஆவர்.
காவல் ஆய்வாளருக்கு கொரோனா
சென்னை சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.நகரில் இறந்தவருக்கு கொரோனா
சென்னை தி.நகரில் கொரோனாவுக்கு மருந்து கண்டறிய முயற்சித்து உயிரிழந்த நபருக்கு கொரோனா இருந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதாகக் கூறி சோடியம் நைட்ரேட் கரைசலை குடித்த சிவனேசன் (47) கடந்த 8ம் தேதி உயிரிழந்தார். உயிரிழந்த சிவனேசன் சளி மாதிரியை ஆய்வு செய்ததில் கொரோனா உறுதியானது.
காஞ்சிபுரம்: 8 பேருக்கு கொரோனா
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஞாயிறன்று 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 122 ஆக உயர்ந்துள்ளது.
செங்கல்பட்டு: 40 பேருக்கு பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்படி புனித தோமையார் மலையில் 25, கேளம்பாக்கம் 6, நந்திவரம் 4, செங்கல்பட்டு நகராட்சி 2, மதுராந்தகம் நகராட்சி 2, திருக்கழுக்குன்றம் 1 என பாதிப்பு உள்ளது.
இதனையடுத்து மாவட்டத்தில் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. 51 பேர் குணமடைந்துள்ளனர். 3 பேர் இறந்துள்ளனர். தற்சமயம் 209 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வியாபாரியின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்தவரின் குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட காய்கறி மொத்த வியாபாரி ஏற்கனவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காய்கறி வியாபாரி குடும்பத்தில் 3 பெண்கள் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருவள்ளூர்: 32 பேருக்கு தொற்று
திருவள்ளூர் மாவட்டத்தில் ஞாயிறன்று (மே-10) 32 நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 322 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 61 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னையில் 9 காவலர்களுக்கு கொரோனா
சென்னை ஆவடியில் 7 காவலர்களுக்கும், மாதவரத்தில் 2 காவலர்களுக்கும் என 9 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்படி சென்னையில் இவர்களோடு சேர்த்து 80 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளளனர்.
நெய்வேலி அனல்மின் நிலைய விபத்து: மேலும் ஒருவர் உயிரிழப்பு
நெய்வேலி 2-வது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒரு பணியாளர் உயிரிழந்தார். ஏற்கனவே சார்புதீன் என்ற பணியாளர் இறந்த நிலையில் தற்போது சண்முகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தொழிலாளி மர்ம மரணம்
திருவள்ளூர் காந்திபுரத்தை சேர்ந்தவர் அந்தோணி (51). இவர் பொதுப்பணி துறை மின் பிரிவில் ஒப்பந்த ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். திருமழிசை பகுதியில் கோயம்பேடு தற்காலிக சந்தை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மே-9 அன்று திருமழிசை பகுதிக்குச் சென்று மாலை அதிகாரிகளை விட்டுமாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ஜீப் அருகே வாயில் நுரைதள்ளி மர்மமான முறையில் இறந்தார்.