நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் விடுதி ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில், ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கின் விசாரணையில், அந்த பணம் நயினார் நாகேந்திரனுக்கு கொண்டு செல்லப்பட்டதாக கைது செய்யப்பட்ட 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில், இன்று நயினார் நாகேந்திரன் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பட்டிருந்தது.
இதற்கிடையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுயேச்சை வேட்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் பட்டியலிடப்பட்ட குற்றத்தில் வராது என அமலாக்காத்துறை தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதை அடுத்து, இவ்வழக்கில் ஏப்ரல் 24ஆம் தேதிக்குள் விரிவாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.