tamilnadu

திருப்பூர் டாக்டர் சரவணன் கொலை வழக்கு

 திருப்பூர், ஜூலை 10 - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் படித்த திருப்பூரைச் சேர்ந்த டாக்டர் சரவணன் கொல்லப்பட்டு ஜூலை 10ஆம்  தேதியுடன் மூன்றாண்டுகள் முடிந்து விட்டது. எனினும் இந்த வழக்கை விசாரிக்கும் தில்லி காவல் துறை இது வரை கொலையாளிகளைக் கண்டு பிடிக்கவில்லை. திருப்பூர் கோபால்நகர் பகுதியைச் சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி கணேசன். இவரது மகன் சரவணன். மதுரை  மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து  முடித்தவர். முதுநிலை எம்.டி. மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக தில்லி எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனையில் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்று அதில் பொது  மருத்துவம் என்ற பிரிவைத் தேர்ந்தெ டுத்தார். 2016ஆம் ஆண்டு அங்கு சேர்ந்து சில வாரங்கள் ஆனநிலையில் ஜூலை 10ஆம் தேதி அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தாருக்குத் தகவல் வந்தது. ஆனால் அவரது சாவில் மர்மம் இருப்ப தாக குடும்பத்தார் சந்தேகம் தெரிவித்தனர். அதற்கேற்ப வலது கை பழக்கமுள்ள சரவணனனின் வலது கையிலேயே விஷ ஊசி செலுத்தப்பட்டிருந்தது. அவரது முகம் உள்ளிட்ட பகுதிகளில் காயம் இருந்தது. இந்நிலையில் தில்லி காவல் துறையினர் அதை தற்கொலை வழக்காக பதிவு செய்து முற்றுப்புள்ளி வைக்க முயன்றனர். டாக்டர் சரவணனின் குடும்பத்தார் இது  குறித்து வழக்குப் பதிவு செய்து, முதல் தகவல்  அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கை பெறவும் தில்லி உயர்நீதி மன்றத்தை அணுக நேரிட்டது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகுதான் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யப்பட்டது. பிரேத  பரிசோதனை அறிக்கையும் குடும்பத்தா ருக்கு கொடுக்கப்பட்டது.

அதில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் சேர்ந்து டாக்டர் சரவணனை கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிந்து சட்டப்படி தண்டனை வழங்க அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ  மாணவர் தலைநகரில் உள்ள மத்திய  அரசுக்குச் சொந்தமான மருத்துவ உயர் கல்வி நிறுவனத்தில் கொலை செய்யப் பட்டது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் இப்பிரச்சனையில் உண்மையைக் கண்டறிய போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்திலும் மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.கே.ரங்க ராஜன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் இப்பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பினர். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலைதான் என உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலும், எய்ம்ஸ் மருத்துவ வட்டா ரத்தின் மீதே சந்தேகத்தின் நிழல்கள் படிந்தபோதும், மத்திய அரசின் கட்டுப் பாட்டில் உள்ள தில்லி போலீஸ், டாக்டர்  சரவணனின் உயிரைப் பறித்த கொலை யாளிகளைக் கண்டுபிடிக்கவில்லை. மூன்றாண்டுகள் உருண்டோடி விட்டது. இச்சம்பவத்தின் கோபம் தணிவதற் குள்ளாக அடுத்ததாக இதே திருப்பூரைச் சேர்ந்த மற்றொரு மருத்துவ மாணவர் சரத் பிரபு டெல்லியில் வேறொரு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அடுத்தடுத்து தமிழக மருத்துவ மாண வர்கள் தலைநகரில் கொலை, மர்ம மரணம் என்ற நிலையிலும் கூட மத்திய அரசு இதில் அக்கறை செலுத்தி குற்றவாளிகளைக் கண்டறியவும், இதில் உள்ள உண்மை நிலையைக் கண்டறியவும் நடவடிக்கை எடுக்கவில்லை.  

சாமானிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான கனவு நீட் போன்ற தகுதித் தேர்வுகளால் கடினமாக்கப்பட்டு வடிகட்டப்படுவது ஒருபுறம் தொடர்கிறது. மற்றொரு புறமோ  மிகச்சிறப்பாக தேர்ச்சி பெற்று எய்ம்ஸ் தகுதித் தேர்விலும் ஒரு முறைக்கு இரு முறை வெற்றி பெற்ற மருத்துவர் சரவணன் கொல்லப்பட்ட சம்பவம் விடை இல்லாமல் நீடிக்கிறது. இறையாண்மை மிக்க நாட்டில் எந்த திசையிலும் கடைக்கோடி கிராமத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு விரும்பிய படிப்பைப் படிப்பதற்கான வாய்ப்பும், பாதுகாப்பும் எல்லா பகுதி களிலும் கிடைக்க வேண்டும். ஆனால் நாட்டின் உயர் பாதுகாப்பு மிக்க தலை நகரிலேயே அந்த வாய்ப்பும், பாதுகாப்பும் கிடைக்கவில்லை என்றால் சுதந்திர நாடு என்பதற்கு என்ன அர்த்தமிருக்கிறது? இப்போதும் கூட  தில்லியில் உயர் கல்வியில்  சேரும் மாணவர்களின் மர்மமான மரணங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஒரே நாடு எனச் சொல்லி எல்லா வற்றையும் ஒரே..ஒரே.. என்ற அடை மொழி முழக்கத்தோடு இணைக்கத் துடிக்கும் மத்திய ஆட்சியாளர்கள், ஒரே நாட்டு மக்கள் என்ற உணர்வோடு பாதிக்கப் படுவோருக்கு நியாயம் கிடைக்கச் செய்ய  வேண்டும். டாக்டர் சரவணன் போன்றவர் களின் மரணத்திற்கு உரிய நியாயம் கிடைக்காதபோது, அதற்கு விடை தேடும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.                                        (ந.நி)