ரூ.4000 கோடிக்கு வடிகால் பணிகள் மேற்கொண்ட காரணத்தால்தான் தற்போது சென்னை தப்பியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் நடவடிக்கை குறித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
"வரலாறு காணாத வெள்ளத்தை சந்தித்தபோதும் கடந்த காலத்தை ஒப்பிடும்போது தற்போது பாதிப்பு குறைவாகவே உள்ளது. 2015-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது தற்போது ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்டுள்ள மழையின் அளவு அதிகம். 2015இல் ஏற்பட்டது செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் உண்டான செயற்கை வெள்ளம். தற்போது ஏற்பட்டுள்ளது இயற்கையான வெள்ளம். ரூ.4000 கோடிக்கு வடிகால் பணிகள் மேற்கொண்ட காரணத்தால்தான் தற்போது சென்னை தப்பியுள்ளது. 2015 வெள்ளத்தில் 199 பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது அதைவிட அதிகமான மழை பெய்தும் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், இந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.