தமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் ஆயிரம் பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை அரசு பணிக்கு தயாராகும் இளைஞர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் அரசு பணிக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் 12 ஆயிரத்து 616 கிராம நிர்வாக அலுவலர்கள் பணியிடங்கள் உள்ளன. அதில், தமிழகத்தில் 2,896 கிராம நிர்வாக அலுவலர் காலிப்பணியிடங்கள் உள்ளன. பொறுப்பான முறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களை அவற்றில் நியமிக்க தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கடந்த பிப்ரவரி மாதம் அரசாணை வெளியிட்டது.
முதல் கட்டமாக, மாநிலம் முழுவதும் ஆயிரம் பேரை மாதம் 15,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கலாம் என்றும் ஓராண்டு அல்லது தேவையான காலம் வரை பணியில் தொடர அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தொடர்ந்து தற்போது அந்தந்த மாவட்டங்களில், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை பணியமர்த்தும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.